ரஜினியின் திடீர் முடிவு...தமிழருவி மணியன் ஏற்கனவே அறிந்ததா? ஏமாற்றமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று இறுதி முடிவாக அரசியலுக்கு வரவில்லை என அறிவித்து விட்டார். இதன்முலம் ஆண்டாண்டு கால மக்கள், ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
ரஜினி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவரை சந்தித்த தமிழருவி மணியன் கட்சி தொடர்பான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றார்.
தற்போது ரஜினியின் இந்த முடிவு, இது தமிழருவி மணியன் ஏற்கனவே அறிந்ததா, இல்லை ரசிகர்களை போல் தமிழருவி மணியனும் ஏமாற்றப்பட்டாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ரஜினியின் இறுதி முடிவு
தமிழக மக்கள் நீண்டகாலம் எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு புதிருக்கு இன்று இறுதி விடை கிடைத்து விட்டது. ஆம்.. நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. மன்னித்து விடுங்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறிவிட்டார்.

ஏமாற்றம்
ரஜினியின் இந்த முடிவு சிலருக்கு ஏமாற்றம் அளித்தாலும், இதை ரஜினியிடம் இருந்து எதிர்பார்த்த ஒன்றுதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் இந்த அறிவிப்பால் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளானவர்களில் முக்கியமானவர் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்.

ரசிகர்களை சூடேற்றியவர்
ரஜினி அரசியலுக்கு வருவார்... மிக விரைவில் வருவார் என சும்மா கிடந்த ரசிகர்களையும் சூடேற்றி கொண்டிருந்தவர் இவர்தான். 2017-ஆம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த போதிலிருந்தே அவருக்கு ஆலோசராக இருந்து வந்தவர் தமிழருவி மணியன். அவர் திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தி அதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.

நல்ல மதிப்பு
இதனால் தமிழருவி மணியனின் பேட்டிக்காக ஏங்கி கொண்டிருந்த ரசிகர்களும் உண்டு.ரஜினி அரசியல் தொடர்பான செய்திகளும் தமிழருவி மணியனை மையமாக கொண்டு சுழன்று வந்தன. இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி நிருபர்களிடம் பேட்டியளித்த ரஜினி, கட்சி தொடங்குவது உறுதி என்றும், இப்ப இல்லனா எப்பவும் இல்ல என கூறினார்.

மேற்பார்வையாளர்
மேலும், தான் தொடங்க போகும் கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் ரஜினி அறிவித்தார். இதற்கிடையேதான் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்த அண்ணாத்த' படப்பிடிப்பில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பரிசோதனையில் ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் நடிகர் ரஜினிகாந்த், உயர் ரத்த அழுத்தம் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்பு சிகிட்சை பெற்று வீடு திரும்பினார். ரஜினி ஓய்வு எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை டாக்டர்கள் அவருக்கு வலியுறுத்தினார்.

நம்பிக்கை அளித்தார்
ரஜினி திட்டமிட்டபடி கட்சி தொடங்குவாரா, அல்லது மக்களை ஏமாற்றி விடுவாரா என பல்வேறு தரப்பினர் பேசினார்கள். அப்போது ரஜினியை வீட்டில் சந்தித்து பேசிய தமிழருவி மணியன், நிருபர்களிடம் கூறுகையில், ரஜினி திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர், சின்னம், கொடி குறித்த அறிவிப்பை அவர் டுவிட்டர் வாயிலாக வெளியிட உள்ளார். கட்சி தொடர்பான அறிவிப்பை அவரே வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.

ஏமாற்றமா?
2 நாட்களுக்கு முன்பு தமிழருவி மணியன் இவ்வாறு கூறிய நிலையில் ரஜினி தற்போது கட்சி தொடங்கவில்லை என கூறியுள்ளார். ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பது தமிழருவி மணியனுக்கு அப்போதே தெரியாதா? இல்லை தெரிந்தும் அதை ரசிகர்களிடம் மறைத்து விட்டாரா? இல்லை ரசிகர்களை போல் அவரும் ஏமாற்றப்பட்டரா? என்பது தமிழருவி மணியன் இனிமேல் அளிக்க போகும் பதில்களில் இருந்துதான் வரும்.












Click it and Unblock the Notifications