இதுதான் ரஜினிக்கும், அஜீத்துக்கும் இடையிலான வித்தியாசம்!
Recommended Video

சென்னை: இதுதான் ரஜினிக்கும் அஜித்துக்கும் உள்ள வித்தியாசம்!! இதை மட்டும் தமிழக மக்கள் புரிந்து கொண்டால் அரசியல் ஆளுமையை எளிதாகவே தேர்ந்தெடுக்கலாம்.
ரஜினி-அஜீத் இருவருக்கும் சினிமாவில் ஒரு பிரச்சனையும், தகராறும், சர்ச்சையும் இதுவரை வந்ததே இல்லை. அதற்கான அவசியமும் எழவில்லை. ஆனால் பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீசானபோதுதான் இருவருக்குமான பொருத்தத்தையும், ஒப்பீட்டையும் ரசிகர்கள் முன்வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பேட்ட படம் 10 நாளில் 100 கோடி வசூல் என்றதும், விஸ்வாசம் படம் 125 கோடி வசூல் என்றார்கள். அதேபோல ரஜினி படத்துடன் வேறு எந்த படமும் வெளியாகாத நிலையில் அஜித் படம் வெளியாக போகிறது என்றதுமே பலர் அஜித்துக்கு கிலியை ஏற்படுத்தினர்.

ரசிகர்கள் பொறாமை
ஆனாலும் "பொங்கலுக்கு படம் ரிலீஸ் என்று முதலில் அறிவித்தது நாம்தான், அதனால் தேதியை மாற்ற தேவை இல்லை" என்று உறுதியாக சொன்னார் அஜித். ரஜினிக்கும் பயப்படவில்லை, சன் பிக்சருக்கும் பயப்படவில்லை, ரஜினி ரசிகர்களை நினைத்தும் கவலைப்படவில்லை. ஆனாலும் இரு படங்களுமே சக்கை போடு போட்டு வந்தாலும், இரு தரப்பு ரசிகர்களுமே எதிர்தரப்பை பொறாமையோடுதான் பார்த்து வருகிறார்கள்.

ஏமாற்றங்கள்
45 வருடமாக சினிமாவில் இருக்கும் ரஜினிக்கு நிகராக இன்று அஜித்தும் இணையாக உருவெடுத்துள்ளார் என்பதும் இந்த பொங்கல் வெளியீடுகள் வழியாக தெளிவானது. இரண்டாவதாக, கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று சொல்லி எதிர்ப்பார்ப்பை ஏமாற்றி, அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றமாகவும் ஆக்கி விட்டவர் ரஜினி.

கட்சி ஆரம்பிக்கவில்லை
போன வருஷம்தான் ஒரு வழியாக வாயை திறந்து அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொன்னவர், மறுபடியும் கட்டையைப் போட ஆரம்பித்தார். இன்னமும் கட்சியை ஆரம்பிக்கவில்லை. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் மறக்காமல் பன்ச் டயலாக்கை வைத்தே காலத்தை ஓட்டி படங்களையும் ஓட வைத்து வருகிறார்.

பஞ்ச் டயலாக்குகள்
ஆனால் அரசியலே வேண்டாம் என்று ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்தவர் அஜித். ஒரு பஞ்ச் டயலாக் கூட அரசியல் வாடை வராமல் கவனமாக பார்த்து கொண்டார். ஆனாலும் இன்றைக்கு ரஜினிக்கு நிகராகவே அவர் பொதுமக்களால் கவனிக்கப்பட்டு வருகிறார். அரசியலே வேண்டாம் என்பவர், இன்றைக்கு அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்பவரை விட பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்படுவது அடுத்த பிளஸ் பாயிண்ட். இதில் அரசியல் பஞ்ச் டயலாக்கே இல்லாமல் தன் படத்தையும் ஓட்ட முடியும் என்பதை நிரூபித்து வருவது அஜித்தின் கூடுதல் பிளஸ்.

காப்பாற்றி விட்டார்
பாஜகவின் பிம்பம் என்று சொல்லும் அளவுக்கு அக்கட்சியின் சாயத்தை தன் மேல் ஊற்றி கொண்டு, இதுவரை எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறி கொண்டு இருக்கிறார் ரஜினி. ஆனால் அஜித், ரஜினிக்கு எதிராக தன் ரசிகர்களை வைத்து காய் நகர்த்தும் பாஜகவை முளையிலேயே ஒடுக்கி விட்டார். தன்னையும், தனது ரசிகர்களையும் சேர்த்துக் காப்பாற்றியுள்ளார்.

ஆணித்தரமான உறுதி
அஜித் யாருடனும் வெளிப்படையாக பேசுவதில்லை, பேட்டி தருவதில்லை, பொது விழாக்களில் கலந்து கொள்வதில்லை, கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் எதையாவது சர்ச்சையாக சொல்லி விட்டு போவதில்லை, படம் ரிலீஸ் ஆக வேண்டும், வெற்றிகரமாக ஓட வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்த தகவல்களை பேட்டிகள் மூலம் தருவதில்லை. மெளனமாக இருந்தாலும் தனது நிலையை ஆணித்தரமாக தெளிவுபடுத்துவதில் கில்லாடியாக இருக்கிறார்.

எல்லாம் பேசும் பல்லி
மொத்தத்தில் அஜித் என்றுமே அஜித்தாகவே இருக்கிறார், அதாவது சுயமாக இருக்கிறார். அதனால்தான் தமிழக மக்களை கட்டி போட்டு விடுகிறார். இதன் காரணமாகவே, ரசிகர் மன்றங்களைக் கலைத்தும் கூட அஜீத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்களைத் தாண்டி தற்போது மக்களின் மனதை அள்ளி விட்டார். "எல்லாம் பேசுமாம் பல்லி.. கடைசியில் கழனி பானையில் விழுமாம் துள்ளி".. நமக்கு என்னமோ இந்தப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications