தினகரன் அதிரடி.. 13ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. அன்றே தொடங்குகிறது பிரச்சாரம்!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அதாங்க தினகரன் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 13ம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அன்றே கட்சியின் வேட்பாளர் பட்டியலையும் தினகரன் வெளியிடவுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தமிழகத்தில் 6 முனைப் போட்டி என்பது முடிவாகிவிட்டது. திமுக, அதிமுக இரு கட்சிகளும் மெகா கூட்டணியை கட்டமைத்துள்ளன. அதோடு தினகரனின் அமமுகவும் ஒரு அணியாக தேர்தலில் களம் காணவுள்ளது
எஸ்.டி.பி.ஐ கட்சியோடு அமமுக கூட்டணி வைத்துள்ளது. அதோடு தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனும் தினகரனோடு இணைய வாய்ப்புள்ளது. இந்த இரு கட்சிகளின் துணையோடு அமமுக களம் காண உள்ளது.
காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் 9 தொகுதிகளில்.. நான்கு இதுதானாம்!
தமிழகத்தில் 6 முனை போட்டி
இவர்கள் தவிர சீமானின் நாம் தமிழர், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் போட்டியிட உள்ளன. ஆக 6 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
அமமுகவின் அனுதாபம்
மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைதேர்தல் நடைபெறவுள்ளதால் தகுதி நீக்கம் செய்யப்பட எம்.ஏ.க்கள் இந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களே மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடும்போது அனுதாப ஓட்டுகள் விழும் என்பது அமமுகவினரின் எதிர்பார்ப்பு.
லோக்சபாவுக்கு புதுமுகங்கள்
ஆகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அந்த சட்டப்பேரவை தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மக்களவை தொகுதிகளுக்கு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க தினகரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக சட்டப்பேரவைக்கான தேர்தல் இப்போது இல்லையென்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று தினகரன் உறுதி அளித்திருந்தாராம்.
தேர்வு பணி
இப்போது சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலும் நடப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களையே அந்தந்த தொகுதிகளில் நிற்க வைக்க தினகரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
13ம் தேதி பட்டியல் ரிலீஸ்
இந்தப் பணியை புதன்கிழமைக்குள் முடித்து 13 ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் நல்ல நேரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட தினகரன் முடிவு செய்துள்ளாராம். ஜெயலலிதா பாணியில் நல்ல நேரத்தை தேர்வு செய்துள்ள அவர், ஜெ. பாணியிலேயே முதன்முதலாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தையும் துவங்க உள்ளாராம்.