பாடநூல்களில் தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்.. என்ன நடந்தது.. திண்டுக்கல் ஐ லியோனி விளக்கம்
சென்னை : தமிழக பள்ளி பாடப்புத்தகங்களில் தமிழ் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இவை திமுக ஆட்சியில் செய்யப்பட்டவை அல்ல. கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தது என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி விளக்கம் அளித்துள்ளார்.
2021-22ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் 12-ம் வகுப்பு பொதுத்தமிழ் பாடநூலில் பாட ஆசிரியர் பெயராகவும், சான்றோர் வரலாற்றிலும் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் பலரின் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் பாட நூல்களில் தமிழ் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

ராமலிங்கனார்
இது தொடர்பாக லியோனி கூறும் போது, ''தமிழ் அறிஞர்களின் பெயர்களில் சாதி நீக்கப்பட்ட செய்திகள் வெளியானபின்னர் தான் நான் ஒவ்வொரு பாடநூலாக நான் எடுத்து ஆய்வு செய்து பார்த்தேன். அதில் ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என்னும் கவிஞரின் பெயர் நாமக்கல் ராமலிங்கனார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தை பார்த்த போது உ.வே.சாமிநாத ஐயர் என்னும் பெயர் உ.வே.சாமிநாதர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

செங்கோட்டையன்
9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தை நான் எடுத்து பார்த்த போது, அதில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்ற பெயர் மனோன்மணியம் சுந்தரனார் என்று மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. 2019ஆம் ஆண்டில் புத்தகத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டு மாற்றப்பட்டது. அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். பாடநூல் கழகத்தின் தலைவராக வளர்மதி இருந்தார். அவர்களின் காலகட்டத்தில் எஸ்சிஇஆர்டிக்குப் பரிந்துரை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

திமுக செய்யவில்லை
எனவே தமிழக பள்ளி பாடப்புத்தகங்களில் தமிழ் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பது புதிய செய்தி அல்ல. மேலும் இது திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நடந்ததுபோலத் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதுவும் உண்மை அல்ல என்றார்.

ஆலோசனை நடக்கிறது
சாதி பெயர்களை நீக்கி கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட இந்த மாறுதல் தொடருமா என்ற கேள்விக்கு,பதில் அளித்த லியோனி, "இந்த மாறுதல்கள் தொடருமா அல்லது தலைவர்களின் பெயர்களுடன் சாதிப் பெயர் மீண்டும் சேர்க்கப்படுமா என்பதை தமிழக முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முடிவெடுப்பார்கள். இதுகுறித்துக் கல்வியாளர்களைச் சந்தித்து ஆலோசித்து, எஸ்சிஇஆர்டிக்குப் பரிந்துரை செய்து முடிவெடுக்கப்படும்.
Recommended Video

லியோனி விளக்கம்
வரும் நாட்களில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் முடிவெடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. திமுக ஆட்சிக் காலத்தில் இத்தகைய குழப்பங்கள் இல்லாமல் பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும்'' இவ்வாறு தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications