விஜய் தொகுதியில் திண்டுக்கல் லியோனியை நோக்கி பாய்ந்து வந்த பாட்டில்.. பிரச்சாரத்தில் அதிர்ச்சி!
திருச்சி: திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் லியோனி மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில் திண்டுக்கல் ஐ.லியோனி மீது மது பாட்டில் வீசப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய், திமுக சார்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சாா்பில் க. ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவா் வி. கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் என். கோபிநாத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்க்கு ஆதரவாக அந்த தொகுதிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியில் திண்டுக்கல் ஐ. லியோனி இன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். வேனில் இருந்து அவர் பேசிக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி காலி மது பாட்டிலை மர்ம நபர் ஒருவர் வீசி உள்ளார்.
அந்த பாட்டில் திண்டுக்கல் லியோனி நின்று பேசிக்கொண்டிருந்த பிரச்சார வேனில் விழுந்து உடைந்து சிதறியது. இதில் நல்வாய்ப்பாக திண்டுக்கல் லியோனிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மது பாட்டிலை வீசிய நபர் யார் என்பது குறித்தும் என்ன காரணத்திற்காக வீசினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில், புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் லியோனி பிரச்சார வேன் மீது மது பாட்டில் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications