டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.30 வரை கூடுதல் வசூல்.. டெண்டர் ஒதுக்கீட்டிலும் முறைகேடு! அமலாக்கத்துறை
சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் 30 வரை கூடுதலாக வசூல் செய்யப்பட்டுள்ளது, அதிகாரிகள் - நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு, டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது, உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கும் டெண்டர் ஒதுக்கபட்டுள்ளது என டாஸ்மாக் மீது ED பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.
பண மோசடி தடுப்பு சட்டம் 2002 ன் படி டாஸ்மாக் நிறுவனம் மீது எழுந்த புகார்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் அமலாக்கத்துறை கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது. சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உள்பட 25 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

என்னென்ன குற்றச்சாட்டுகள்
இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை இது தொடர்பாக அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
* மதுபானங்கள் விற்பனை செய்யும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில், கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்தல், ஆர்டர்கள் பெற வேண்டும் என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மதுபான உற்பத்தியாளர்கள் லஞ்சம் வழங்குதல், ஊழியர்களின் பணியிட மாற்றத்திற்கு, பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்குவது போன்ற குற்றச்சாட்டுகள் வந்தன.
* இந்த புகார்களின் பேரில் நடந்த சோதனையில், போக்குவரத்து டெண்டர், பார் லைசென்ஸ் டெண்டர், மதுபான நிறுவனங்களுக்கு சாதகமான ஆர்டர்கள், உயர் அதிகாரிகள் துணையோடு பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
* மது பாட்டில்கள் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. அதாவது விண்ணப்பத்தாரரின் சுய விவரத்திற்கும், அவர்கள் வழங்கிய டிமாண்ட் டிராப்ட்டிற்கும் (டி.டி.) இடையே முரண்பாடு உள்ளது.
* ஜிஎஸ்டி, பான்கார்டு இல்லாதவர்களுக்கு கூட டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
* மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.
* டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது.
* டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
* பார் உரிமங்கள் வழங்குவதிலும், இதற்கான ஒப்பந்தங்களிலும் தவறு நடந்துள்ளது.
பான் விவரம் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் டெண்டர்
* திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடந்துள்ளது.
* உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* முறையான கேஒய்சி, பான் விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கூட டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
* போக்குவரத்து, கட்டடம் உட்கட்டமைப்பு ஆகியவற்றிலும் ஊழல் நடந்துள்ளது.
* ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல எஃப் ஐ ஆர் பதியப்பட்டதன் அடிப்படையில் டாஸ்மாக்கில் விசாரணை நடைபெறுகிறது.
* முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், பிற முக்கிய கூட்டாளிகள் பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
* இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊழல் தடுப்புச் சட்டம், பணமோசடி சட்டத்தின் கீழ் வரையறுக்கப்படுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுபான உற்பத்தி நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் பெரியளவிலான நிதி மோசடி கண்டறியப்பட்டுள்ளது.
* எஸ்என்ஜே, கல்ஸ், அக்கார்ட், செயிபெல் மற்றும் தேவி பாட்டில்கள், கிரிஸ்டல் பாடில்ஸ் மற்றும் ஜிஎல்ஆர்ஹோல்டிங் ஆகியவை ஈடுப்பட்டு இருக்கின்றன. இவர்கள் கணக்கில் இல்லா பணம் மற்றும் முறைகேடான பணம் செலுத்தியது தொடர்பான குற்றங்களில் ஈடுப்பட்டுள்ளது சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
* மதுபான நிறுவனங்கள் செலவுகளை அதிகரித்து, குறிப்பாக பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் போலி கொள்முதல் செய்து அதன்மூலம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பணத்தை ஈட்டியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications