"போதை பொருள்" ஜாபர் சாதிக் விவகாரம்.. என்சிபி அலுவலகத்தில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக இயக்குநர் அமீர் டெல்லி என்சிபி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். 11 மணி நேரம் அமீரிடம் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்தினர்.
வெளிநாடுகளில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெல்லியில் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தான் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஜாபர் சாதிக் இப்போது தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குநர் அமீர் தான் இயக்கி வருகிறார். மேலும், அவருடன் இணைந்து ஹோட்டல் மற்றும் சில தொழில்களையும் செய்து வருவதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே போதைப்பொருள் கடத்தலில் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அமீர் உடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 11 மணி நேரம் அமீரிடம் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவடைந்தது.
மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகள் அளித்த தகவலின்படி நடந்த இந்த ரெய்டில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில் இது தொடர்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர், மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் முதலில் தலைமறைவானார். அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டு அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகே ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications