உயிர் பிழைத்த சூர்யா? ராசி இல்லாத ஏடி டூ சூப்பர் ஹிட் வரை! கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்!
சென்னை: ராசி இல்லாதவன் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட தான், எப்படி சக்சஸ்ஃபுல் இயக்குநர் என்ற பெயரை எடுத்தேன் என்பது குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கலகலப்பான இயக்குநர்களில் மிகமிக முக்கியமானவர் கே.எஸ். ரவிக்குமார். இவரது படத்தில் ஹீரோக்களே காமெடி காட்சிகளில் கலக்கி இருப்பார்கள்.

'முத்து'வில் ரஜினிகாந்த் செய்த காமெடி காட்சிகள் கலக்கல் ரகம். அதேபோல 'ஆதவன்' படத்தில் நடிகர் வடிவேலுவை சூர்யா வைத்துச் செய்திருப்பார். இப்போது அவரை வடிவேலு நடித்த காமெடி காட்சிகளில் இது தனி ரகம்.
அடுத்து 'பஞ்சதந்திரம்'. கமல்ஹாசன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே அலப்பறை செய்து ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த படம். இப்படி கே.எஸ்.ரவிக்குமார் படங்கள் என்றாலே 100% காமெடி கலவை கட்டாயம் கலந்திருக்கும்.
அவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நாட்டாமை' படம் குறித்து, 'ஆதவன்' படத்தில் சூர்யாவுக்கு நடத்த விபத்து குறித்து சில தகவல்களைக் கூறியிருக்கிறார்.
அத்துடன் ஒரு காலத்தில் ராசி இல்லாதவனாகக் கருதப்பட்ட தான் எப்படி சக்சஸ் இயக்குநர் என்ற அடையாளத்தைப் பெற்றேன் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் தனது பேட்டியில்,"ஆரம்பக் காலத்தில் நான் அசிஸ்டெண்ட் இயக்குநராக வேலை பார்த்த படங்கள் பல சரியாகப் போகவில்லை. சில படங்கள் சுத்தமாக ஓடவே இல்லை. ஆகவே, என்னை ராசி இல்லாத அசிஸ்டெண்ட் டைரக்டர் என்றுதான் பலரும் சொன்னார்கள். அப்படித்தான் அன்றைக்கு இருந்தது.

நான் வேலை பார்த்து 100 நாள்கள் ஓடிய முதல் படம் 'ராஜா ராஜாதான்'. ராமராஜன் தான் ஹீரோ. அந்தப் படம் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருந்த போதே, 'புது வசந்தம்' படத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தப் படமும் சில்வர் ஜூப்ளி.
அதன்பிறகு நானே இயக்குநர் ஆனேன். அதன்பின்னர் எனக்கு எல்லாமே வெற்றிப் படங்கள்தான். அது ஆண்டவன் அருள் என்றுதான் சொல்வேன். என்ன தான் என்னுடைய உழைப்பு, விடா முயற்சி என்று சில விசயங்கள் இருந்தாலும் வெற்றிக்கு ஆண்டவன் அருள் என்பதும் தேவை" என்றவர் தொடர்ந்து தனது 'நாட்டாமை' படத்தைப் பற்றி பேச்சை மாற்றினார்.
"அந்தப் படத்தில் குஷ்பு செய்த பாத்திரத்தை நடிகை லக்ஷ்மி நடிக்க வேண்டியது. அதேபோல உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், 'நாட்டாமை' விஜயகுமார் நடித்த ரோல் சிவாஜி பண்ணவேண்டியது. அவருக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. ஆகவே விஜயகுமாரை நடிக்க வைத்தோம்.
லக்ஷ்மியிடம் பேசி ஒப்பந்தம் செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்த வழியில் குஷ்பு ஷுட்டிங் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அங்கே போன போது குஷ்பு என்னைப் பார்த்ததும் ஓடி வந்து பேசினார். அப்போது விசயத்தைச் சொன்னேன். அவர், 'நான் ஏன் நடிக்கக் கூடாது' என்றார்.

'அந்த ரோல் வயதான கேரக்டர். உங்களுக்கு செட் ஆகாது. நீங்கள் குட்டைப் பாவாடை போட்டு நடித்துகொண்டிருக்கும் சின்ன பெண்' என்றேன். உடனே அவர், 'அண்ணாமலையில் நான் ஒயிட் ஹேர் வைத்து நடித்திருக்கிறேன். அது வயசான கேரக்டர் தானே' என்றார்.
அவர் நடிப்பதற்கு முடிவான பிறகுதான் கதையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்தேன். 'கொட்டப் பாக்கும் கொழுந்து வெற்றிலையும்' பாட்டு எல்லாம் குஷ்புவுக்காகச் சேர்த்தோம். அதற்கு முன்னால் கதையில் அந்தக் காட்சிகளை எல்லாம் யோசிக்கவே இல்லை.
இப்படிப் பல மாற்றங்கள் வரவர படத்தின் கனம் கூடிக்கொண்டே போனது. நிறை நட்சத்திரங்கள் உள்ளே வரவர படத்தின் வெற்றியும் உறுதியானது" என்கிறார் ரவிக்குமார்.
அடுத்து சூர்யா நடிப்பில் வெளியான 'ஆதவன்' படத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து குறித்து இப்போது பேசியுள்ளார்.
"நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். ஆனால் சூர்யா கேட்காமல் அந்தக் காட்சியில் டூப் போடாமல் நடித்தார். ஒரு மிகப்பெரிய கண்ணாடி விளக்கு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். அது உள்ளாக ஒரு பாம் செட் பண்ணி இருப்பதைப் போன்ற காட்சி. அதை அடித்து உடைத்து வெடிக்க விடாமல் சூர்யா தடுக்க வேண்டும்.

அந்தக் காட்சியை தென் ஆப்ரிக்காவில் எடுத்தோம். ரோப் கட்டி இழுத்தால், சரியாக அந்தக் கண்ணாடி விளக்குப் பக்கம் போய் நிற்கும். அந்தளவுக்குக் கச்சிதமாக செட் செய்திருந்தோம்.
பல முறை ஒத்திகைப் பார்த்துத்தான் செய்தோம். ஆனால், காட்சி எடுக்கும்போது ஏதோ ஒரு வயர் கட் ஆகிவிட்டது. ரோப்பை விட்டவுடன் சர்ர்ர்ர் என்று மேலே பறந்தது. அந்த வேகத்தில் போன போது சூர்யா தலையில் அடிப்பட்டுவிடும் என்று எல்லோரும் அரண்டு போய்விட்டோம்.
ஆனால், சூர்யா சமயோசிதமாகத் தலையை அப்படியே நகர்த்திவிட்டார். அவர் தோள்பட்டையில் சரியான அடி. அவர் அப்படிச் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான். தலையில் மிகப்பெரிய படுகாயம் ஏற்பட்டு இருக்கும். அதற்குப் பதிலாக கை அடிப்பட்டது.
அந்தக் காட்சியைப் படம் முடிந்து டைட்டில் வரும்போது காட்டி இருப்பேன். சூர்யாவிடம், இவ்வளவு எல்லாம் எந்தப் படத்திலும் ரிஸ்க் எடுக்காதீங்க' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பேன்.
இன்றைக்கு நினைத்தாலும் மனதைப் பதற வைக்கின்ற சண்டைக் காட்சி அது. அதை சூர்யா சவாலுடன் செய்தார்" என்று சொல்லி இருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார்.












Click it and Unblock the Notifications