“இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்”.. திருப்பதி லட்டு விவகாரத்தில் இயக்குநர் மோகன் ஜி காட்டம்!
சென்னை: "எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்." என திருப்பதி லட்டு செய்ய நெய்யில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய் சேர்க்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது தொடர்பாக காட்டமாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர் என்றும் புனிதமான திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்தியுள்ளனர் என்றும் பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

சந்திரபாபு நாயுடுவின் இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்பா ரெட்டி, "சந்திரபாபு நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது." என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யை சோதனை செய்து, அதில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பதாக ஆய்வக அறிக்கை உறுதி செய்துள்ளது. குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் வெளியிட்ட பரிசோதனை அறிக்கையின் படி, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்புகள் இருந்தது ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவில் பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்ப்பட்டது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதைச் செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்." எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. அரசியல் தொட்ரபாக அவ்வப்போது கருத்து கூறி வருகிறார். மோகன் ஜி, சாதின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் படம் எடுப்பதாக விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications