நீ இங்க வர வேணாம்ணே.. இவ்வளவு கோரத்தை தாங்க மாட்டே.. ஒரே நாளில் அனாதையானோம்!"
இயக்குனர் சரவணனின் ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: "எங்களின் தாகம் தீர்க்க இறந்தும் உதவுகின்றது நாங்கள் வளர்த்த தென்னை" என்று கண் முன்னாலேயே முறிந்து.. சரிந்து.. சின்னாபின்னமாகி.. விழுந்த தென்னைகளை பார்த்து கலங்கி போய் ட்விட்டர் பதிவு போட்டுள்ளார் டைரக்டர் இரா.சரவணன்!
'கத்துக்குட்டி' என்ற படத்தின் இயக்குனர்தான் இரா.சரவணன்! படம் பெயர்தான் கத்துக்குட்டி.. மீத்தேன்வாயு எடுப்பதன் மூலம் விளைநிலங்கள் பாழாவதோடு மண்வளம் முற்றிலும் மரித்துப்போய்விடும் என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மையை மையமாகக் கொண்டும் அதில் அரசியல் நையாண்டிகளை இழைத்தும் தந்தவர் இரா.சரவணன்!
முதல் படத்திலேயே மண்ணுக்கான மரியாதையை கொடுத்து மீத்தேனுக்கு எதிரான போராட்டவாதிகளாக மக்களை மாற்றியவர் சரவணன். விவசாய கூலியின் மகன் இரா.சரவணனின் ஒவ்வொரு ட்வீட்களும் விவசாயத்தின் பெருமையை வீரியமாக சொல்லி வருகின்றன. அவரது இந்த ட்வீட்கள் கூட அப்படிப்பட்டவைதான்!
|
நாங்கள் வளர்த்த தென்னை
கஜா புயலின் தாக்கத்தால் கண்ணெதிரே நிலைகுலைந்து சாயும் தென்னைகளை வீடியோவாக கடந்த 2 தினங்களாக பதிவிட்டு வருகிறார். அதில் "குடிக்க தண்ணீர்தான் கிடைக்கவில்லை; ஆனால் இளநீர் கிடைக்கிறது. எங்களின் தாகம் தீர்க்க இறந்தும் உதவுகின்றது நாங்கள் வளர்த்த தென்னை" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
|
நிமிர்கிறது எங்கள் நிலம்
மற்றொரு பதிவில், "இயற்கையைச் சபிக்கவில்லை. தெய்வத்தைத் தூற்றவில்லை. அரசாங்கத்தைத் திட்டவில்லை. எனக்கு நீ உனக்கு நான் என ஒருவருக்கொருவர் கைகொடுத்து, அழக்கூட அவகாசம் இல்லாமல் மன வலிமையோடு நிமிர்கிறது எங்கள் நிலம்!" என்று கூறியுள்ளார்.
|
ஒரே நாளில் அனாதை
"நீ புள்ளை மாதிரி வளர்த்த எல்லா மரமும் போச்சுப்பா" எனக் கதறுகிறார் என் தாய். "நீ இங்க வர வேணாம்ணே. இவ்வளவு கோரத்தை தாங்க மாட்டே" என்கிறான் தம்பி. ஒவ்வொரு மரத்துக்கும் பெயர் வைத்து குடும்ப உறுப்பினர் போல வளர்த்தோம். மற்றவர்களின் பாதிப்பு இதைவிட துயரம். ஒரே நாளில் அனாதையானோம்!" என்கிறது இன்னொரு பதிவு.
விவசாயியின் வலிகள்
இயற்கை சீற்றத்தை தாங்கி கொள்ள முடியாத ஒரு விவசாயியின் கனத்த இதயம் சரவணனின் இந்த ட்விட்டர் பதிவுகளில் வெளிப்பட்டு போகிறது. விளைநிலங்களோடு உயிராகவும், உணர்வாகவும் மட்டுமின்றி உரமாகவும் வாழ்ந்து வரும் எத்தனையோ விவசாயிகளுக்கு மட்டும்தான் தெரியும் இரா. சரவணனின் இந்த ட்விட்டர் வரிகளின் வலிகளும்.. வரலாறுகளும்!