''வன்னியர் சங்கத்திற்கு களங்கம்! கட்சியில் ஒழுங்கீனம்''! முக்கிய நிர்வாகியை கட்டம் கட்டிய ராமதாஸ்!
சென்னை: இரண்டு நாட்களுக்கு முன்னர் வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து மட்டும் நீக்கப்பட்ட ரவிராஜை தற்போது மொத்தமாக கட்டம் கட்டி ஒதுக்கியிருக்கிறார் ராமதாஸ்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

''திருவள்ளூர் மாவட்டம் கல்பாளையத்தைச் சேர்ந்த கோ.ரவிராஜ் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், இன்று (27.08.2023) ஞாயிற்றுக்கிழமை முதல் கட்சி மற்றும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
அவருடன் பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் துணை அமைப்பினர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.'' இவ்வாறு ராமதாஸ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து 2 நாட்களுக்கு முன்னர் தான் அவரை விடுவித்திருந்தார் பு.தா.அருள்மொழி.
அதற்குள் இந்த அதிரடி ஆக்ஷனை எடுத்து பாமகவை பரபரப்பாக்கியுள்ளார் ராமதாஸ். ரவிராஜ் மீதான ராமதாஸின் கோபத்திற்கு அவரது அண்மைக்கால நடவடிக்கைகளே காரணமாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ரவிராஜூக்கு ராமதாஸ் மீது கோபம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே வன்னியர் சங்கத்தில் ரவிராஜ் வகித்து வந்த மாநிலத் துணைத் தலைவர் பதவியை பிடிக்க பலரும் போட்டி போட ஆரம்பித்துள்ளனர். விரைவில் புதிய நிர்வாகி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications