கிருஷ்ணகிரியில் ரஜினி மன்றம் இருக்குமா? முக்கிய நிர்வாகிகள் சரமாரியாக நீக்கம்.. பின்னணியில் திமுக?
கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இனிமேல் ரஜினி மக்கள் மன்றம் பெயரளவுக்கு இருக்குமா என்றுகூட தெரியவில்லை. ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் விலகிய நிலையில் இன்றும்கூட முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே காலந்தாழ்ந்த அரசியல் வருகை, கட்சி அறிவிப்பின் போன்ற காரணங்களுக்காக ரஜினி மீது பெரும்பாலானோர் கடுப்பில் உள்ளனர். அதிலும் சமீப காலமாகவே ரஜினியின் செயல்பாடுகள், பேட்டிகளினால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதன்காரணமாகவே கிருஷ்ணகிரி, மாவட்டச் செயலாளராக இருந்து வந்த மதியழகன் திமுகவில் சேரப்போவதாக ஒரு தகவல் வந்ததும், அதிரடியாக மறுநாளே அவரை அந்த பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார் ரஜினி.
அறிக்கை
இதையடுத்து, மதியழகன் 350 பேருடன் திமுகவில் இணைந்தேவிட்டார். அப்போது, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேர் திமுகவில் சேர உள்ளதாக அக்கட்சி தலைமை அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்படியே இணைந்தும் வருகின்றனர்.
திமுக மீது குற்றச்சாட்டு
வரும் தேர்தலில் ரஜினி போட்டியிடபோவதில்லை என்ற அறிவிப்புதான் மன்றத்தினருக்கு ஷாக்கை தந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரை திமுகதான் தங்கள் பக்கம் பேசி அழைத்துள்ளது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது.
ரஜினி அப்செட்
எப்படி பார்த்தாலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ரஜினிக்கு ரொம்பவே நெருக்கமானது. ஒருவகையில் சொந்த மாவட்டமும்கூட. இங்கேயே மக்கள் மன்றம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இதனால் ரஜினி அப்செட்டிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.
மீண்டும் 20 பேர்
இந்நிலையில் அதே கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்புகளில் இருந்த 20 முக்கிய நபர்கள் மீண்டும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த 20 பேரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தே நீக்கப்பட்டுவிட்டதாக மன்ற நிர்வாகி விஎம் சுதாகர் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைவார்களா?
எதற்காக இவர்கள் நீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இவர்களும் திமுகவில் இணைய போகிறார்களா? அல்லது திமுக இவர்களை தேடிவந்து அழைத்ததா? அல்லது வேறு கட்சிகளுக்கு செல்ல போகிறார்களா என்ற விவரம் எல்லாம் தெரியவில்லை. ஆனால் இப்படி பதவி நீக்கம் அடிக்கடி நிகழ்வது என்பது ஒரு மன்றத்துக்கு ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பது மட்டும் உண்மை.