குற்ற வழக்கை மறைத்ததாக டிஸ்மிஸ்ஸான பயிற்சி காவலர்.. மீண்டும் பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: குற்ற வழக்கை மறைத்ததாக பயிற்சியின் போது காவலரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இரு வாரங்களில் மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் அரவிந்த்ராஜ். இவர், கடந்த 2013-ம் ஆண்டு நடந்த 2-ம் நிலை காவலர் பதவிக்கான தேர்வில் வெற்றிப்பெற்றார். 2013-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி பயிற்சிக்கு சென்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் கீழ்பாக்கம் குடியிருப்பில் நின்ற போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்த்து கைது செய்யப்பட்டார்.

இதை மறைத்து அவர் போலீஸ் பயிற்சியில் கலந்துக் கொண்டதாக கூறி, அவரை பணி நீக்கம் செய்து ராஜபாளையம் 11-வது பட்டாலியன் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அரவிந்த்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டதால், போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் சிலருக்கு ஏற்பட்ட பொறாமை காரணமாக, நடக்காத சம்பவம் தொடர்பான வழக்கில் தன் பெயரையும் சேர்த்து விட்டதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என, தன்னை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால், பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழ்நாடு காவலர் சார்பு பணி விதிகளின்படி. பயிற்சியில் இருக்கும் ஒருவரை பணி நீக்கம் செய்யும் முன்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்து, அவரது விளக்கத்தை பெற்ற பின்னரே இறுதி முடிவு எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், மனுதாரர் விவகாரத்தில் அதுபோல விளக்க நோட்டீஸ் கொடுக்கவில்லை. அவரது கருத்தையும் கேட்காதது, இயற்கை நீதிக்கு எதிரானது எனக் கூறி, பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, 2 வாரங்களில் மீண்டும் பணியில் சேர்த்து பயிற்சி வழங்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications