ராகுல்காந்தி தகுதி நீக்கம்..அரசு இல்லமும் இல்லை..கமலாலயம் முற்றுகை..சென்னையில் காங்கிரசார் கைது
சென்னை: எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தை முற்றுகையிட முயற்சி செய்த காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது நாடு முழுக்க பிரசாரம் செய்தார் ராகுல் காந்தி.
கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது.
ராகுலின் பேச்சு குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவருக்கு எதிராக குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.

அவதூறு வழக்கில் தண்டனை
இந்த வழக்கின் விசாரணை 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 23-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ராகுல்காந்தியின் எம்.பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது.

அரசு வீட்டை காலி செய்யும் ராகுல்
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராகவும்,அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ராகுல்காந்தி தங்கியிருக்கும் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் எனவும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அஞ்சமாட்டேன்
இந்திய மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கவே நான் இங்கே இருக்கிறேன். என்னை தகுதி நீக்கம் செய்வதாலோ, எந்தவித மிரட்டல்களாலோ, சிறையில் தள்ளுவதாலோ என்னை தடுக்க முடியாது நாட்டு மக்களுக்காக போராடுவேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவில்,தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என்று மாற்றியுள்ளார்.

கடிதம் எழுதிய ராகுல்காந்தி
வீட்டைக் காலி செய்யுமாறு விடுக்கப்பட்ட நோட்டீசுக்கு ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார். அதில், கடந்த 4 முறையாக லோக்சபா எம்பியாக இருந்த எனக்கு அந்த வீட்டில் கிடைத்த மகிழ்ச்சியான நினைவுகளுக்கு கடன்பட்டுள்ளேன். எனது உரிமைகள் குறித்து பழி எதுவும் கூறாமல் கடிதத்தில் உள்ள விவரங்களை பின்பற்றி நிச்சயமாக நடப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

கமலாலயம் முற்றுகை
இதனிடையே ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்தும்,. அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு இன்று காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றினர்.












Click it and Unblock the Notifications