சசிகலா தலைமை இருந்தா வெற்றி... இல்லனா வாய்ப்பில்லை ராஜா- தகுதி நீக்கம்செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்!
சென்னை: ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க அனைவரையும் ஒன்றிணைத்து இந்த ஆட்சியை உருவாக்கியவர் டிடிவி தினகரனும், சசிகலாவும்தான் என்று தகுதி நீக்கம்செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மாரியப்பன் கென்னடி, கதிர்காமு , முத்தையா, தங்கதிரை ஆகியோர் தெரிவித்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல்களை கூறுகிறார் என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட்டால் ஆட்சியை உருவாக்க முடியும். இல்லையெனில் அதிமுக தோல்வி அடையும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

சசிகலா ஆட்சியை ஒன்றிணைத்தார்
தகுதி நீக்கம்செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மாரியப்பன் கென்னடி, கதிர்காமு , முத்தையா, தங்கதிரை ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- 18 சட்டமன்ற உறுப்பினர்கள் டிடிவி தினகரனை நம்பி போனதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் என கூறுவது தவறானது. ஓபிஎஸ் எதிர்த்தபோது ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க அனைவரையும் ஒன்றிணைத்து இந்த ஆட்சியை உருவாக்கியவர் டிடிவி தினகரனும், சசிகலாவும்தான்.

அரசை கலைப்பது நோக்கமல்ல
நாங்கள் அரசை கலைக்க வேண்டும் என செயல்படவில்லை முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் எதிர்த்தோம். நாங்கள் நடுரோட்டில் இல்லை. டிடிவி தினகரன் எங்களுக்கு உயர்பதவி வழங்கி அழகுபார்க்கிறார். 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ததே எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடியை தேர்வு செய்த எங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டார். பொதுமக்கள் மத்தியில் அவர் தவறான தகவல்களை கூறுகிறார்.

மக்கள் பதிலடி தருவார்கள்
மனசாட்சியை அடமானம் வைத்து பேசிவருகிறார். வரும் தேர்தலில் மக்கள் அவருக்கு தக்க பதிலடி தருவார்கள். சி.வி.சண்முகத்தின் பேச்சும் கண்டிக்கதக்கது. தன்னிடம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைப்பதற்காக டிடிவி தினகரன் மீது பழி சுமத்துகிறார் முதல்வர். முதல்வர், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மட்டும் தான் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் எதிர்க்கின்றனர்

மிகப்பெரிய சாதனை
சிவி சண்முகத்திற்கு மாவட்ட செயலாளர் பதவியும், ஜெயக்குமாருக்கு நிதி அமைச்சர் பதவியும், எடப்பாடிக்கு முதல்வர் பதவியும் அளித்தவர் சசிகலா. முதல்வர் சசிகலாவிற்கு துரோகம் செய்து கழுத்தறுத்துவிட்டார். சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகப்பெரிய சாதனை. தொண்டர்கள் சொந்த செலவில் நேரில் வரவேற்க வந்தனர். சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட்டால் ஆட்சியை உருவாக்க முடியும். இல்லையெனில் அதிமுக தோல்வி அடையும்.












Click it and Unblock the Notifications