தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ2,500 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ2,500 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் ரொக்கம், முழு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலம் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதன்படி ஜனவரி 4-ஆம் தேதி நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கு தேவையான கரும்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில் திராட்சை, முந்திரி, ஏலம் உள்ளிட்ட பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரூ2,500 ரொக்கம் வழங்கும் விவகாரம் ஏற்கனவே சர்ச்சையானது.
சட்டசபை தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சி பிரமுகர்களே இந்த உதவி தொகையை வழங்குவது போல டோக்கன் அடித்து விநியோகித்தது நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.