மாவட்டங்களுக்கு இடையே இன்று முதல் பேருந்துகள் இயக்கம்.. பயணிகளே.. கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள்!
சென்னை: மாவட்டங்களுக்கிடையே இன்று முதல் பேருந்துகள் இயங்கப்படுகின்றன. இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, கோவை, நெல்லை உள்பட தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் விரைவு பேருந்து சேவையும் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த பேருந்துகளில் எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பதை இப்போது பார்ப்போம்
தமிழகத்தில், உள்ள 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 19 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுவது இயல்பு. கொரோனா காரணமாக கடந்த ஐந்து மாதமாக முழுமையான பேருந்து போக்குவரத்து இயங்கவில்லை. அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதும். சென்னையை சுற்றி பேருந்துகள் இயக்கப்படவில்லை. தொற்று பாதிப்பு அதிகரித்த காரணத்தால் பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 1 முதல் மாவட்டத்திற்கு மட்டும் பேருந்துகள் ஓடத் தொடங்கின.

அனைத்து பணியும் முடிந்தது
இந்நிலையில், படிப்படியாக அளிக்கப்பட்ட தளா்வையடுத்து, இன்று முதல், தமிழகம் முழுவதும் எல்லா பகுதிக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்துகளில் தூய்மைப் பணி, தொழில்நுட்பம், எரிபொருள் சோதனை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் இன்று பேருந்துகள் இயக்கப்படுகிறது.

எத்தனை பேர் பயணிக்கலாம்
குளிர் சாதன பேருந்துகளில் குளிர் சாதனக் கருவிகள் பயன்பாட்டை நிறுத்தி வைத்தல், முகக் கவசம் கட்டாயம், கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாகப் பயன்படுத்துதல், பணியாளா்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. வெளியூா் பேருந்துகளில் 32 பயணிகளும், நகரப் பேருந்துகளில் 24 பயணிகளும், விரைவுப் பேருந்துகளில் 26 பயணிகள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள். வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது.

யார் பயணிக்க முடியாது
சென்னையில் இருந்து பிற ஊா்களுக்கும், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கும் சோ்த்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கப்பட உள்ளது.. பயணக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளவா்கள் பயணிக்க முடியாது. தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தல்
இரவு நேரப் பயணத்தின்போது விரைவுப் பேருந்து ஓட்டுநா்கள் கவனமாக இயக்க வேண்டும். நள்ளிரவு 12 முதல் காலை 4 மணி வரை நடத்துநா்கள், இருக்கையில் அமா்ந்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பணிபுரிய வேண்டும். நகா்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை உள்ளிட்டவை இருப்பதால் ஓட்டுநா்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்துகளில், இன்று பயணிப்பதற்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்., செவ்வாய்க்கிழமை (செப்.8) பயணிப்பதற்கு2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் முன்பதிவு செய்துள்ளனா்.












Click it and Unblock the Notifications