சசிகலாவை இயக்கும் தம்பி? டிடிவியை இழுக்க திட்டம்? தலைதூக்கும் குடும்ப ஆதிக்கம்?
சென்னை: சசிகலா மேற்கொண்டுள்ள அதிமுகவை ஒருங்கிணைக்கும் சுற்றுப் பயணத்திற்கு அவரது சகோதரர் வி.கே.திவாகரன் தான் திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலே விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் என்று அறிவித்திருந்த சசிகலா, மீண்டு அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கப் போவதாகவும் அதற்காக நாளை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார். இன்னொரு பக்கம் கடந்த 6 நாட்களாக எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட ரீதியாகக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையின் போது மீண்டும் சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அதற்கு எடப்பாடி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் முன்பே செய்தி வெளியானது. இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிய அதிமுக மாஜி அமைச்சர்கள் டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் ஆகிய மூவரையும் கட்சியில் மறுபடி இணைத்துக் கொள்ள வேண்டிய வலியுறுத்தியதாகவும் அதை ஏற்க எடப்பாடி மறுத்துவிட்டதாகவும், ஊடகங்கள் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிலிருந்து கட்சியினரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துப்பட்டு வருவதாக எடப்பாடி எதிரணியினர் பேசிவருகின்றனர்.
தென்காசியிலிருந்து தனது பயணத்தை சசிகலா தொடங்க இருப்பதால், தென்காசி அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை எடப்பாடி தற்போது தள்ளி வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. சசிகலாவின் பயணத்திட்டங்களை திட்டமிட்டுக் கொடுக்கும் இடத்தில் முன்பு டிடிவி தினகரன் இருந்தார். ஆனால், சில காலமாக அந்த இடம் காலியாகவே இருந்து வந்தது. டிடிவி தினகரனின் கை சசிகலா குடும்பத்தில் ஓங்கி இருந்தபோது, தானும் தனது மகனும் ஓரங்கட்டப்படுவதாகத் திவாகரன் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பின்னர் அவரது ஆதரவாளர்களுடன் மன்னார்குடியில் ஆலோசனை நடத்திய இவர் தனிக்கட்சி தொடங்க இருப்பதாகக் கடந்த 2018இல் அறிவித்தார். அதன் பின்னர் 'அண்ணா திராவிடர் கழகம்' தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். இவருக்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக ஒரு தரப்பினர் கூறிவந்தனர்.
ஆகவே, சசிகலா தனது படத்தையும் பெயரையும் திவாகரன் பயன்படுத்தக் கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஒரு பக்கம் டிடிவியுடன் பகை மற்றொரு பக்கம் தனது சொந்த சகோதரியுடன் மனக்கசப்பு என திவாகரனின் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. அந்தக் கோபத்தில் சசிகலா தனது சகோதரியே அல்ல என்று அறிவித்தார் திவாகரன்.
மீண்டும் 2022 ஆம் ஆண்டு சசிகலாவுடன் இணைவதாக திவாகரன் தரப்பிலிருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. சசிகலாவின் அண்ணன் மகன் டிடிவி தினகரன் அமமுக தொடங்கிய பிறகு சசிகலாவுடன் திவாகரனின் குடும்ப உறவு பலப்பட ஆரம்பித்துள்ளது. இப்போது சசிகலாவுடன் தினகரன் மற்றும் திவாகரன் குடும்பம் ஒன்று சேர்ந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சசிகலாவின் இந்தப் பயணத்திட்டத்திற்கு ரோடு மேப் போட்டுக் கொடுத்தவரே திவாகரன் தான் என்கிறார்கள்.
மேலும் சசிகலாவுடன் கடந்த 10 நாட்களாக திவாகரன் இது தொடர்பாக ஆலோசனை செய்துவந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கூடவே டிடிவியை இந்தப் பயணத்திட்டத்துடன் இணைக்கும் முயற்சியையும் திவாகரன் எடுத்து வந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியைச் சமாளிக்க வேண்டும் எனில் குடும்ப ரீதியான இந்த இணைப்பு தேவை என்றும் டிடிவி தரப்பு அணிக்கு திவாகரன் தூது அனுப்பியுள்ளார். கூடவே ஓபிஎஸ் தரப்பையும் சசிகலா பயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் பின்னணியில் பாஜகவின் மாஸ்டர் பிளான் ஒன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது எடப்பாடி பழனிசாமி பாஜகவைப் புறக்கணித்ததால், பேக் டோர் வழியாகப் பழிவாங்கும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மாவட்ட ரீதியாக நடத்தப்படும் சசிகலாவின் கூட்டத்தில் பெரிய அளவுக்கு மாஸ் காட்ட வேண்டும். அதற்கான திரைமறைவு உதவிகளைப் பெறவே மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரன் பாஜக பக்கம் நிபந்தனையற்ற ஆதரவு தந்தார் என்றும் சொல்கிறார்கள்.
ஆக, 2026 சட்டசபைத் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார் சசிகலா. மேலும் இந்தப் பயணத்தை இன்னும் வேகப்படுத்த பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல் ஆலோசகர்கள் யாரேனும் ஒருவரைச் சந்திக்கும் திட்டம் ஒன்றையும் திவாகரன் தரப்பு கைவசம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக சசிகலாவின் பயணம் வெற்றி பெறுவதற்காக, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உள்ள அதிமுக நிர்வாகிகளை டிடிவி தினகரனே நேரடியாக அழைத்துப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பயணத்தால் அதிமுக ஒன்றிணையுமா? அல்லது எடப்பாடி பழனிசாமி சசிகலா குடும்பத்தினரைச் சமாளித்து கட்சியை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்வாரா என்பதற்கு எல்லாம் விரைவில் விடை கிடைக்கும் என்கிறார் ஒரு அதிமுக முக்கிய நிர்வாகி.












Click it and Unblock the Notifications