தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. குரோம்பேட்டை டூ தாம்பரம் வரை "வாகன அணிவகுப்பு"
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் குரோம்பேட்டை டூ தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஆண்டுதோறும் இயக்கி வருகிறது.

அந்த வகையில் சென்னையிலிருந்து வழக்கமாக பேருந்துகள் செல்லும் நிலையில் இன்று கூடுதலாக 1586 பேருந்துகளும் நாளை 1195 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். ஆக மொத்தம் சென்னையில் இருந்து 10,518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு, பூந்தமல்லி, கேகே நகர், தாம்பரம், மாதவரம் ஆகிய 5 இடங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பேருந்துகள் இல்லாமல் தங்கள் சொந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் சாலையில் கார், இரு சக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது குரோம்பேட்டை டூ தாம்பரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியை தாண்டுவதற்குள் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த முறை சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு முதலே மக்கள் புறப்பட்டு வருகிறார்கள். மாலை வேளைகளில் நெடுஞ்சாலைகளில் கூட்டநெரிசல் அதிகம் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications