Diwali Holiday: சென்னையில் கன ரக வாகனங்களுக்கு இன்று முதல் மாற்று வழித்தடம் அறிவிப்பு
சென்னை: தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டியைக் கொண்டாடுவதற்காக ரயில் பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றர். இந்நிலையில், சென்னையில் தீபாவளி விடுமுறையொட்டி, சென்னை நகரப் பகுதி, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக கன ரக வாகனங்களுக்கு மாற்று வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியைக் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில் மூலமாகவும், சொந்த வாகனங்கள் மூலமாகவும் செல்வது வழக்கம். ஏராளமான மக்கள் வெளியேறுவார்கள் என்பதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சென்னை நகர்ப் பகுதி, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கன ரக வாகனங்களுக்கான வழித்தட மாற்றுப் பாதையை தாம்பரம் மாநகர காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை (KCBT) நோக்கிச் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், நகரில் நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, தாம்பரம் மாநகர காவல்துறை, பின்வரும் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான வழித்தட மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது.
அக்டோபர் 17, 18 ஆம் தேதிகளில் சென்னை மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பூந்தமல்லியிலிருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் - திருவண்ணாமலை, திருக்கோவிலூர், வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம். மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம், ஜிஎஸ்டி நோக்கி வரும் கனரக வாகனங்கள், மதுரவாயலில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள், ஓரகடம் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம். அக்டோபர் 21, 22 ஆம் தேதிகளில் செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம். இரும்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக கனரக வாகனங்கள், வண்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச் சாலை வழியாகத் திருப்பிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications