இன்று தீபாவளி.. பட்டாசு வெடிக்க முடியுமா? முடியாதா? “மழை அலர்ட்”! வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னை: தீபாவளி பண்டிகை நாளான இன்று (அக்டோபர் 31) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்தால் பட்டாசு வெடிக்க முடியாதே என்பது தான் சிறுவர், சிறுமியர்கள் உட்பட பலரின் கவலையாக இருக்கிறது.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகையின்போது பல ஆயிரம் கோடி அளவிற்கு பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் முதலே பட்டாசு சத்தம் காதைக் கிழிப்பது வழக்கம்.

15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: இந்த ஆண்டு, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் மழை வெளுத்து வருகிறது. மாலை நேரங்களில் மழை பெய்வதால், தீபாவளி விற்பனையும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நாளான இன்றும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 31 தீபாவளி பண்டிகை நாளான இன்று திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி நாளில் மழை: அக்டோபர் 31 ஆம் தேதி அதாவது இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளையும் மழை எச்சரிக்கை: நவம்பர் 1 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 2 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். . நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 3 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ.4 மற்றும் நவ.5ம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை: சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று (புதன்கிழமை) பகல் நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 செமீ மழை பதிவானது. நேற்று கிழக்கு திசைக்காற்று வீசத் தொடங்கிய நிலையில், புறநகர் பகுதிகளில் காலை 11.45 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மாநகர் பகுதியிலும் மழை பரவியது. பின்னர் கனமழை கொட்டித் தீர்த்தது.
கொட்டிய கனமழை, பட்டாசு விற்பனை பாதிப்பு: சென்னையில் அண்ணாநகர், கே.கே.நகர், கிண்டி, அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை காரணமாக கடைகளில் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. தீவுத் திடலில் பட்டாசு விற்பனை செய்ய கடைகள் போடப்பட்டிருந்த நிலையில் மழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இரவு நேரத்தில் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. இதன் காரணமாக, தீபாவளி பண்டிகையை ஒட்டி சாலையோரங்கள், நடைபாதைகளில் கடை போட்டிருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். மழை காரணமாக தீபாவளி பர்ச்சேஸ் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.












Click it and Unblock the Notifications