ஜஸ்ட் பாஸ் செய்த பிரேமலதா.. விருத்தாசலம் தந்த த்ரில் வெற்றி! தேமுதிக பொதுச்செயலாளர் உருக்கமாக நன்றி
சென்னை: பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு தேர்தலில் அளித்த ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மக்கள் தன்னை நேரடியாக சந்தித்து காட்டிய அன்பும் ஆதரவும் தங்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்ததாக அவர் கூறியுள்ளார். விருத்தாச்சலத்தில் மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் அனைவரின் பார்வையும் தேமுதிக போட்டியிட்ட தொகுதிகளின் மீதே இருந்தது.

குறிப்பாக, திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்ட முடிவு, ஆரம்பத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. "வாக்கு வங்கி குறைந்த ஒரு கட்சிக்கு இத்தனை இடங்களா?" என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெற்றுள்ள வெற்றி, அக்கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் ஆக்சிஜனாக அமைந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்ட தொகுதியில் கடும் இழுபறி நீடித்தது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருந்ததால் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் நகம் கடித்தபடி காத்திருந்தனர்.
ஒருகட்டத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்றபோது தேமுதிக முகாமில் அமைதி நிலவியது. ஆனால், இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணப்பட்டபோது நிலைமை தலைகீழாக மாறியது. இறுதியில் பிரேமலதா விஜயகாந்த் 918 வாக்குகள் என்ற மிகக் குறைந்த, ஆனால் மிக முக்கியமான வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்தார்.
கேப்டன் கனவு
இந்த வெற்றி தேமுதிகவிற்கு வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல, அது ஒரு கவுரவ போராட்டம் என்றே சொல்லலாம்.. கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு, பிரேமலதாவின் தலைமையின் கீழ் கட்சி சந்திக்கும் முதல் மிகப்பெரிய தேர்தல் இது.
கடந்த சில தேர்தல்களில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான வாக்கு வங்கியையே தேமுதிக பெற்றிருந்தது. அத்தகைய சூழலில், திமுக இவர்களுக்கு 10 இடங்களை ஒதுக்கியது ஒரு மிகப்பெரிய அரசியல் பரபரப்பை தந்துவிட்டது.. ஆனால், பிரேமலதாவின் இந்த வெற்றி, திமுக எடுத்த அந்த ரிஸ்க்கிற்கு ஒரு ஆறுதலான வெற்றி கிடைத்துள்ளது.
விஜயகாந்த் சென்ட்டிமெண்ட்
தேமுதிகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இடங்களை மீண்டும் கைப்பற்றுவதும், இழந்த வாக்கு வங்கியை மீட்டெடுப்பதும் பிரேமலதா முன் இருந்த சவால்கள். இந்த த்ரில் வெற்றி, தேமுதிக தொண்டர்களிடையே மீண்டும் ஒரு புத்துணர்ச்சியைப் பாய்ச்சியுள்ளது.
"கேப்டன் இல்லை என்றாலும், அவரது கொள்கைகளும் பிரேமலதாவின் உறுதியும் கட்சியைத் தாங்கிப் பிடிக்கும்" என்பதை இந்த 918 வாக்குகள் வித்தியாசம் நிரூபித்துள்ளது. சட்டமன்றத்திற்குள் பிரேமலதாவின் குரல் ஒலிக்கப்போவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் தேமுதிகவின் அரசியல் நகர்வுகள் இன்னும் வேகமெடுக்கும்.
இருந்தாலும் இந்த மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் தேமுதிகவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் மக்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெற இன்னும் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா உள்ளார். தற்போதைக்கு, 10 இடங்கள் வழங்கிய திமுகவிற்கு பிரேமலதாவின் இந்த வெற்றி ஒரு வலுவான பதிலடியாகவும், அக்கட்சியின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும் சான்றாகவும் அமைந்துள்ளது.
பிரேமலதா உருக்கம் நன்றி
இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு தேர்தலில் அளித்த ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மக்கள் தன்னை நேரடியாக சந்தித்து காட்டிய அன்பும் ஆதரவும் தங்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த தேர்தல் அனுபவம் தங்களுக்கும், தங்கள் கட்சியான தேமுதிகவுக்கும் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விருத்தாசலம் தொகுதியின் வளர்ச்சிக்காக அடிப்படை வசதிகள் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும், மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications