திடீரென ஜகா வாங்கிய "கஜா" .. தொண்டர்கள் ஏமாற்றம்.. கேப்டனின் அடுத்தகட்ட மூவ் என்ன?
சென்னை: அதிமுக- பாஜக- பாமக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை என தேமுதிகவும்,பாஜகவும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்தின் திரைப்படங்களை எப்படி மறக்க முடியாதோ அது போல் அவரது அரசியல் ஏற்றங்களையும் இறக்கங்களையும் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் அரசியலில் சாதனைகளை செய்துள்ளார்.
ஜெயலலிதாவை சட்டசபையில் எதிர்த்து கேள்வி கேட்டவர். சட்டசபையில் நாக்கை துறுத்தி அமைச்சர்களை மிரட்டியவர். இத்தகைய கேப்டன் விஜயகாந்த் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் எழும்.
தேமுதிக விமர்சனம்
அதன்படிதான், நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பல்வேறு சந்தர்ப்பங்களில் மத்திய - மாநில அரசுகளை தேமுதிக விமர்சனம் செய்துள்ளது.
சென்னை
இந்த நிலையில் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்த போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் அவரது மைத்துனர் சுதீஷ் ஈடுபட்டதாக கூறப்பட்டது. கடந்த சனிக்கிழமை விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்ததால் எதிர்பார்ப்பு இன்னும் கூடியது.
அதிமுக கூட்டணி
இந்த நிலையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக தலைவர்களை சந்தித்து கூட்டணியை இறுதி செய்தார். அது போல் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்தது. இந்த நிலையில் பியூஷ் கோயல் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்றதால் இன்று இரவே அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
9 தொகுதிகள்
ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக கோயல் இங்கு வரவில்லை என தேமுதிகவும் விஜயகாந்தின் உடல்நலம் விசாரிக்கவும் மட்டுமே இங்கு வந்ததாக கோயலும் தெரிவித்துள்ளனர். இது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேமுதிக 9 தொகுதிகளை கேட்டு அதற்கு அதிமுக உடன்படாததால் இது போன்ற மரியாதை நிமித்த சந்திப்பு என கூறிவிட்டதாக கருதப்படுகிறது.
எதிர்பார்ப்பு
இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுக கூட்டணியை விஜயகாந்த் தரப்பு முடிக்கலாம். இல்லாவிட்டால் வேறு யாருடனாவது கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். எனவே விஜயகாந்தின் அடுத்த கட்ட மூவ் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.