அசராத விஜயகாந்த்.. 3வது நாளாக பிரசாரம்.. இவருக்கா உடம்பு முடியல-னு சொன்னாங்க!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று மூன்றாவது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலம் சரியில்லாத நிலையிலும், கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அவர் முன்பு போல் சரளமாக பேச முடியாத நிலையில் உள்ளதால், கூலிங் கிளாஸ் அணிந்து, கையை மட்டும் அசைத்து பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று இரண்டாவது நாளாக, சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து, வேனில் ஏறி நின்று, கை அசைத்து, கட்டை விரலை காட்டியும் பிரசாரம் செய்தார். அவர் பேச முடியாத நிலையில் உள்ளதால், விஜயகாந்த் ஏற்கனவே உணர்ச்சி பொங்க பேசிய 'ஆடியோ' பதிவுகள் ஒலிபரப்பப்பட்டன. இதனால் தொண்டர்கள் உற்சாகமானார்கள்.
எழும்பூரைத் தொடர்ந்து, திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், ஆவடி உள்ளிட்ட பல தொகுதிகளுக்கும் சென்று நேற்று விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் விஜயகாந்த். இன்று பல்லாவரம் தேமுதிக வேட்பாளர் 'அனகை' முருகேசனை ஆதரித்து, பி.வி. வைத்தியலிங்கம் ரோடு காந்தி சிலை அருகில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து மதுராந்தம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.
அங்கிருந்து செய்யூர் செல்லும் விஜயகாந்த், அத்தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். உடல் நலம் முடியாவிட்டாலும், தொடர்ந்து 3வது நாளாக அவர் பிரசாரம் செய்வது அவரது தொண்டர்களுக்கு நிச்சயம் பெரும் 'டானிக்' என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications