தேமுதிக தலைவர் விஜயகாந்த்.. திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதி.!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத உச்ச நட்சத்திரமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த்.. இவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட் அடித்த காலங்களும் இருந்தன. அப்போது ரஜினி, கமலுக்கே போட்டி தரும் இடத்தில் இருந்தவர் விஜயகாந்த்.

மேலும், சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்தவர்.. கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் போது துணிச்சலாக தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கியவர்.. முதல் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்த் அனைவரும் வியக்கும் வகையில் 8% வாக்குகளைப் பெற்றார். மேலும், அவர் மட்டும் தேமுதிக சார்பில் எம்எல்ஏவாக தேர்வானார்.
விஜயகாந்த்: பிறகு 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து எதிர்கொண்ட விஜயகாந்த், 29 இடங்களில் வென்று எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பிற்கும் வந்தார். அப்போது அவருக்கும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சட்டசபையிலேயே பல முறை காரசார விவாதங்களும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2016இல் மக்கள் நலக் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டனர். இருப்பினும், அது தேமுதிகவுக்கு தோல்வியில் முடிந்தது.
அதன் பிறகு அவரது உடல்நிலை பாதிக்கத் தொடங்கியது. இதனால் முன்பு போல அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் போக அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் முற்றிலுமாக தவிர்த்தார். அவ்வப்போது மிகச் சில நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் கலந்து கொண்டு வருகிறார். கட்சி பணிகளையும் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா தான் கட்சி பணிகளைக் கவனித்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதி: இதற்கிடையே 71 வயதான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலையைப் பரிசோதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். வழக்கமான மருத்துவ பரிசோதனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விளக்கம்: இருப்பினும், அவரது உடல்நிலை குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், தேமுதிக இது தொடர்பாக விளக்கமும் அளித்திருந்தது. அதில், "தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications