கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கு ஆதரவு.. விஜயகாந்த் பரபர அறிக்கை
Recommended Video
சென்னை: 4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர்களுக்கு, தேமுதிக தொண்டர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அக்கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டணிக்குள் குழப்பம் நிலவியதாக கூறப்பட்ட நிலையில், விஜயகாந்த் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில், 4 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. இதேபோல திமுகவும் நான்கு தொகுதிகளிலும், போட்டியிடுகின்றன.
|
தேமுதிக மீது எதிர்பார்ப்பு
இந்த நிலையில், லோக்சபா தேர்தலின்போது தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும், அதிமுக போதிய ஆதரவு அளிக்கவில்லை என்று முணு முணுப்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகின. எனவே 4 தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விஜயகாந்த் இன்று ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்த் அறிவிப்பு
இதுதொடர்பாக, தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற நான்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களுக்கு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஆதரவை அளிக்கிறது.

கூட்டணி தர்மம்
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி, சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்கு, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வாக்கு வங்கி
திருப்பரங்குன்றம் தொகுதியில் தேமுதிகவுக்கு நல்ல வாக்கு வங்கியுள்ளது. சூலூரிலும் அக்கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. விஜயகாந்த் தெரிவித்துள்ள இந்த ஆதரவால் அதிமுக தரப்பு குஷியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications