ஆவேசமாக பேசிய பிரேமலதா.. சூட்டோடு சூடாக எடப்பாடி வீட்டுக்கு போன தேமுதிக நிர்வாகிகள்.. என்ன காரணம்?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர். சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற தேமுதிக நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி விஜயகாந்த் குருபூஜைக்கு பங்கேற்க அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.
அதிமுக பாஜக தங்களது கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக நேற்று முன் தினம் தமிழகம் வந்திருந்த தமிழக பாஜக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் எடப்பாடியுடன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதில் அதிமுகவிற்கு 170 தொகுதிகளும், பாஜக மற்றும் பாமகவிற்கு தலா 23 தொகுதிகளும் தேமுதிக மற்றும் அமமுகவிற்கு தலா 6 தொகுதிகளும் ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் பேசிய பிரேமலதா, "எந்தக் கட்சி சார்பாக இப்படியான தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியானதோ, இதுவே அந்தக் கட்சிக்கு அழிவுக் காலத்தை உண்டாக்கும்" என்று ஆவேசமாக கூறினார்.
அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தான் ஆலோசனை நடத்தியிருக்கிறது. எப்போது எங்கள் கட்சியின் பெயரை பயன்படுத்தினார்களோ, அப்போதே எங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை வந்துவிட்டது. இதனை அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா? இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
சும்மா அப்படியே தட்டிவிட்டு செல்லக் கூடாது. தேமுதிக என்ற கட்சிக்காக ஏராளமானோர் உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். காலையில் இவ்வாறு பிரேமலதா பேசியிருந்த நிலையில் மாலையில் தேமுதிக நிர்வாகிகள் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி விஜயகாந்த் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எல்.கே சுதீஷ், விஜயகாந்த் குருபூஜையையொட்டி அதில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பிதழ் வழங்கினோம் என்று கூறினார். கூட்டணி குறித்து பேசவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications