சசிகலாவை உச்சியில் தூக்கி வைக்கும் பிரேமலதா எல்லாம் காரணமாகத்தானாம்
சசிகலாவை பிரேமலதா ஆதரிப்பது காரணத்தோடுதானாம். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக தேமுதிக கூட்டணியை பேசி முடித்தவர் சசிகலாவாம்.
சென்னை: சசிகலாவிற்கு ஆதரவாக பிரேமலதா பேசி வருகிறார். இதற்குக் காரணம் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளை சுமூக பேசி முடித்தவர் சசிகலாதானாம். 41 இடங்களை பெற்றுக்கொடுத்ததும் அவர்தானாம் அதற்கு நன்றிக்கடனாவே சசிகலா இப்போது ஆதரவாக பேசி வருகிறாராம்.
சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறி விட்டார். டெல்லியில் சென்றிருந்த போதும் அதை ஆணித்தரமாக தெரிவித்து விட்டார். அப்படி இருந்தும் சசிகலாவிற்கு ஆதரவான குரல்கள் கூட்டணி கட்சிக்குள் இருந்தே எழுகின்றன.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கடந்த வாரங்களாகவே தனது பேட்டிகளில் சசிகலா அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி வருகிறார். சசிகலாவை ஒரு பெண்ணாக வரவேற்கிறேன் என்றும் சொல்லி வரும் பிரேமலதா, ஒவ்வொரு பேட்டியிலும் அவருக்கு ஆதரவாகவே பேசி வருகிறார்.
கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவிற்கு குடைச்சல் கொடுப்பது காரணமாகத்தானாம். அது ஏன் சசிகலா மீது பிரேமலதாவிற்கு அத்தனை அக்கறையும் ஆர்வமும் கொண்டிருக்கிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் கேட்ட போது, 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளை நினைவுபடுத்துகிறார்கள்.

சசிகலாவின் முயற்சி
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளை சுமூக பேசி முடித்தவர் சசிகலாதானாம். 41 இடங்களை பெற்றுக்கொடுத்ததும் அவர்தானாம்.

எதிர்கட்சி அந்தஸ்து
அப்போதைய சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவின் வெற்றி பலரும் எதிர்பாராதது. திமுகவை பின்னுக்குத் தள்ளி எதிர்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்தில் அமர்ந்தார்.

சமாதானப்படுத்திய சசிகலா
சட்டசபையில் ஜெயலலிதா உடன் விஜயகாந்த் மோதல் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்தார். தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா என்றெல்லாம் நாக்கைத் துருத்தி கேட்டார். அப்போதும் சமாதானக் கொடி பிடித்தவர் சசிகலாதானாம். ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான சண்டை முடிவுக்கு வர வேண்டும் என்று சமாதானம் பேசினார். அது முடியாமல் போனது வேறு கதை.

சசிகலாவை வரவேற்க ஆர்வம்
இதனை எல்லாம் நினைத்துப் பார்த்துதான் சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வருகிறாராம் பிரேமலதா. அதன் மூலம் அதிமுகவிற்கு குடைச்சலை கொடுக்கலாம் அதிக சீட்டை வாங்கி விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அதிமுக தலைமையை மசிவது போல இல்லை. இந்த கூட்டணி குழப்பத்தை எல்லாம் பாஜக பார்த்துக்கொள்ளும் என்று கம்மென்று வேடிக்கை மற்றுமே பார்க்க ஆரம்பித்து விட்டனர் அதிமுகவினர்.

தேர்தல் வேலையை பாருங்க
யாருக்கு எந்த தொகுதி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடப்போகிறோம் என்று தெரியாமலேயே அதிமுக, திமுக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது. கூட்டணியில் உள்ள உதிரி கட்சிகள் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கின்றன. தேமுதிகவின் பிரேமலதாவோ தேர்தல் வேலையை பாருங்கள் வெற்றி பிரகாசமாக இருக்கிறது என்று நம்பிக்கையுடன் பேசி வருகிறார். அவரது நம்பிக்கை பலிக்குமா? பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வருவாரா என்பதே ஒவ்வொரு தேமுதிக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications