அதிமுகவுடன்தான் கூட்டணி.. இந்த ஒரே விஷயத்துக்காகத்தான் அறிவிக்காமல் இழுத்தடிக்கிறது தேமுதிக
Recommended Video

சென்னை: தேமுதிக, அதிமுகவுடன்தான் வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது என்று உறுதி ஆகி விட்டதாகவும், ஒரே ஒரு விஷயத்திற்காக தான் இன்னமும் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்தின் தேமுதிக கட்சி, ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளிடமும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஆனால் திமுகவை, தேமுதிக அணுகும் போது காலம் கடந்துவிட்டது. திமுக கூட்டணி அனைத்தும் முடிவாகி விட்டதால் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க முடியாது என்று தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷிடம், திமுக பொருளாளர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

தொண்டர்களுக்கு கடிதம்
மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திமுக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், மேலும், 20 தொகுதிகளில் தோழமை கட்சிகள் போட்டியிடப்போவதாகவும், திட்டவட்டமாக அறிவித்து விட்டார். எனவே இப்போது தேமுதிகவிற்கு திமுகவின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. வேறு வழியில்லாத நிலையில் உள்ள தேமுதிக அதிமுக கூட்டணியில் தான் இடம் பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிருப்தியில் அதிமுக
திமுகவிடமும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிக பேசிய விவகாரம் வெளியே வந்ததால் அதிமுக தலைவர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எப்படியாவது இந்த கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வந்துவிட வேண்டும் என்று உறுதி காட்டுவதால், அதிமுக தலைவர்களும் வேண்டா வெறுப்பாக சரி என்று கூறி வைத்துள்ளனர்.

5 தொகுதிகள்
ஆனால் தேமுதிகவுக்கு இப்பொழுது வேறு போக்கிடம் இல்லை என்பதால் எப்படியும் தங்கள் நிபந்தனைக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும் என்று நினைக்கிறது அதிமுக தலைமை. 5 தொகுதிகளை ஒதுக்க தயாராக இருந்தாலும் அதில் பலவும் வெற்றி பெற வாய்ப்பு இல்லாத, அல்லது தேமுதிக விரும்பாத தொகுதிகள் என்று கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதனால் அதிர்ச்சியில் உள்ள தேமுதிக, கடைசி நேர முயற்சியாக துரைமுருகனிடம் பேசிப் பார்த்தும் பலனில்லை. இப்போது வேறு வழியில்லாமல் தங்களுக்கு விருப்பம் இல்லாத தொகுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. பாஜக மூலமாக அழுத்தம் கொடுத்து அதிமுகவை வேறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வைக்க கடைசி கட்ட முயற்சியில் தேமுதிக தலைவர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகத் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இன்னும் தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.

தொகுதிதான் இழுபறி
அதேநேரம், இன்னும் இரு நாட்களில் இந்த அறிவிப்பு திட்டவட்டமாக வெளியாகும் என்று சுதீஷ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். எப்படியாவது நல்ல தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதற்காக பாஜக மூலமாக அதிமுக தலைமைக்கு தேமுதிக தொடர்ந்து தூதுவிட்டு வருகிறது. ஆனால் அவர்கள் விரும்பிய தொகுதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இரண்டு நாட்களில் அதிமுகவுடன் கூட்டணி என்பதை தேமுதிக அறிவிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.












Click it and Unblock the Notifications