தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை.! அடுத்தாண்டு வாய்ப்பு வழங்கப்படும்- அதிமுக அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்பதில் குழப்பம் இருந்தே வந்தது. கூட்டணி உடன்படிக்கை படி சீட் வழங்க வேண்டும் என தேமுதிக சொன்ன நிலையில், அதிமுக மவுனம் காத்தே வந்தது. இதற்கிடையே தேமுதிகவுக்கு அடுத்தாண்டு, அதாவது 2026ல் ராஜ்யசபாவில் ஒரு இருக்கை வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 6ல் 4 இடங்கள் திமுகவுக்குக் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மற்ற இரு இடங்கள் அதிமுகவுக்குப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேமுதிக ராஜ்யசபா சீட்
அதில் கடந்த லோக்சபா தேர்தலின் போது உறுதியளித்தபடியே தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர்கள் சொல்லி வந்தனர். அதாவது கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் தேமுதிகவால் ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை.
இருப்பினும், அந்த தேர்தல் கூட்டணி உடன்படிக்கை சமயத்திலேயே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டையும் அதிமுக உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அப்போது எதுவும் வெளியாகவில்லை. அப்போது தேமுதிக 5 சீட்களில் போட்டியிடும் என்று மட்டுமே அறிவிப்பு வெளியானது. ராஜ்யசபா சீட் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
நீடித்த சஸ்பன்ஸ்
இருப்பினும், கடந்த சில வாரங்களாக ராஜ்யசபா சீட தொடர்பாக தேமுதிக பேசி வருகிறது. கூட்டணி சமயத்தில் உறுதியளித்தபடி தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்பதை அக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், அதிமுக தலைமை இதில் மவுனம் காத்தே வந்தது. இதனால் தேமுதிகவுக்கு சீட் கிடைக்குமா என்பதில் குழப்பம் தொடர்ந்தே வந்தது.
தேமுதிகவுக்கு சீட் இல்லை
இதற்கிடையே இப்போது அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தேமுதிக, பாஜக என எந்தவொரு கூட்டணிக் கட்சிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரு சீட்களுக்கும் அதிமுகவே போட்டியிடுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்
அதேநேரம் ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த தேமுதிகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்றாலும் 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் கூறியிருக்கிறார்.
அதிமுக அறிவிப்பு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, "2026ம் ஆண்டு தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படும். அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரவே செய்கிறது. இந்தாண்டு நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக இரு சீட்களில் போட்டியிடும்" எனத் தெரிவித்தார்.
இந்த முறை எப்படியும் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்பதில் தேமுதிக நம்பிக்கையாகக் காத்திருந்தது. இருப்பினும், அடுத்தாண்டு தான் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது அக்கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications