உப்புச் சப்பில்லாத 4 தொகுதிகள், வேட்பாளர்கள்.. உதயசூரியன் உதயமாகி... தேமுதிக அஸ்தமனமாகுமோ?
தேமுதிகவுக்கு 4 முக்கியத்துவம் இல்லாத தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது.
Recommended Video

சென்னை: அன்றைக்கு 3-வது அணி அமைத்து வைகோவால் தேமுதிக கரைந்தது என்றால், இன்றைக்கு அதிமுகவால் சுவடு கூட தெரியாமல் விரைவில் மறைந்து விடும்போல நிலைமை உருவாகி உள்ளது!
எத்தனையோ நாள் இழுபறிக்கு பிறகு தேமுதிக உடன்படிக்கை கையெழுத்தானது. தேமுதிக நடந்து கொண்டது போல தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியும் இழுபறிக்கும், கூட்டணி அவலத்துக்கும் ஆளானது இல்லை.
சரி, இத்தனை முறை சந்திப்பு, இத்தனை முறை பேச்சுவார்த்தை, இத்தனை முறை சாலிகிராமத்துக்கு அரசியல் தலைகள் படையெடுப்பு, என களேபரங்கள் பல நடந்தாலும், கடைசியில் தந்திருப்பது என்னவோ 4 சீட்டுகள்தான்! அந்த 4 சீட்டுகளையும் எதற்காக விஜயகாந்த் வாங்கினார் என்று இப்போதுவரை புரியவில்லை. காரணம் தொகுதிகள் வலுவில்லாதது மட்டுமில்ல, வேட்பாளர்களும் வலுவில்லாதவர்களே!

கள்ளக்குறிச்சி
யாருக்கு என்ன தந்தாலும் சரி, எனக்கு கள்ளக்குறிச்சியை தந்துவிடுங்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்டு கொண்டிருந்தது சுதீஷ்தான்! இவருக்கு இங்கே ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. கடந்த முறை பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையிலும், சென்டிமென்ட் போன்ற காரணங்களுக்காகவும் இதே தொகுதியை கேட்டார். கடந்து முறை போலவே இந்த முறையும் கள்ளக்குறிச்சி தொகுதி சாதகமாக இருக்குமா என்ன?

கௌதம் சிகாமணி
மேலும் இவருக்கு எதிராக போட்டியிடுவரை பற்றி சுதீஷ் கொஞ்சமாவது நினைத்து பார்த்திருக்க கூடாதா? திமுக சார்பில் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி நிறுத்தப்பட்டுள்ளார். சொந்த செல்வாக்கு, கட்சி பலம், பண பலம் எல்லாவற்றையும் உள்ளே இறக்கி உதயசூரியனை உதிக்க செய்வார் என்பதே இன்றைய நிலையாக உள்ளது.

திருச்சி தொகுதி
திருச்சியை பொறுத்தவரை தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன்தான் வேட்பாளர். சொந்த தொகுதியை சேர்ந்தவர் என்றாலும் பிரபலமே இல்லாதவர். ஆனால் மாவட்ட செயலாளராகவும் கட்சியின் முதல் அவை தலைவராகவும் இருந்திருக்கிறார். திருச்சி ஒரு ஸ்டார் தொகுதி. வெறும் கூட்டணி பலத்தை நம்பி இளங்கோவன் களமிறங்கினாலும் திருநாவுக்கரசு, சாருபாலா தொண்டைமான் இவர்களுக்கு இடையில் இளங்கோவன் சிக்கி திண்டாட போவதுதான் நடக்க போகிறது.

விருதுநகர்
விருதுநகர் தொகுதியில் அழகர்சாமி வேட்பாளர். இவரும் புதியவர்தான். அரசியல் அனுபவம் இல்லாதவர்தான். வெறும் சாதி பலத்தை நம்பி இறங்குகிறார். ஆனால் அந்த தொகுதியில் ராகுலின் நெருங்கிய நண்பர் மாணிக்தாகூர் போட்டியிட்டால், இவரது நிலைமை என்னாகும்? பெரும் சிக்கல்தான்!

வடசென்னை
வடசென்னையை போய் எங்களுக்கு தருகிறீர்களே என புலம்பியது தேமுதிக. கடைசியில் அந்த தொகுதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகிறார். இவரும் இத்தொகுதியில் பிரபலம் இல்லாதவர். எதிர்தரப்பிலோ, ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர் கலாநிதி.. சொல்லணுமா என்ன? அறிமுகம் தேவையில்லை. திமுக பணம், பண பலம் எல்லாம் பல ரவுண்டு சுற்றி வந்து வடசென்னையிலும் உதயசூரியன் உதிக்கலாம்.

சாத்தியமாகுமா?
ஆக மொத்தம் அதிமுக ஒதுக்கிய 4 தொகுதிகளும் வலுவில்லாத தொகுதிகள் என்றால், தேமுதிக நிறுத்திய வேட்பாளர்களும் வலுவில்லாதவர்களே.. இன்றைக்கு இருக்கக்கூடிய நெருக்கடியான சூழலில் புதிய வேட்பாளர்களை தேமுதிக களமிறக்கலாமா? வெறும் அதிமுக கூட்டணி ஒத்துழைப்பை நம்பி இறங்கலாமா? ஏற்கனவே பெரும்பாலான மக்கள் அதிமுக-பாஜக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும்போது, தேமுதிக வெற்றி என்பது எப்படி சாத்தியமாகும்?

கேப்டன் இல்லாத நிலை
இதில் விஜயகாந்த்தாலும் பிரச்சாரம் பண்ண முடியாத நிலைமை. ஆக கடைசியில் 4 தொகுதிகளிலுமே உதயசூரியன் உதயமாவதுடன், தேமுதிக அஸ்தமனமாவதுதான் நடக்க போகிறது! கேப்டனுக்கு மட்டும் உடல்நலம் சரியாக இருந்தால் இந்த 4 தொகுதிகளின் நிலைமையே வேற மாதிரி மாத்தி காட்டி இருப்பார் என்பதுதான் தேமுதிகவினரின் அடிமனசு எண்ணம்!












Click it and Unblock the Notifications