It's Unbelievable..திமுக - அதிமுக கூட்டணி? விஜய்யை வீழ்த்த பலே ப்ளான்! கைகோர்த்த ஸ்டாலின் -எடப்பாடி?
சென்னை: தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஒரே அணியில் இணையுமா என்ற கேள்வி மீண்டும் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு காரணமாக அமைந்துள்ளது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள கருத்து.
"அதிமுக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல. பல்வேறு காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளன. திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்தால் அதில் என்ன தவறு?" என்ற அவரது கேள்வி அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
வழக்கமாக எதிர் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த திமுக மூத்த தலைவர் ஒருவரிடம் இருந்து இத்தகைய கருத்து வெளியானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, தமிழக அரசியலின் பாரம்பரிய கூட்டணி கணக்குகள் வேகமாக மாறி வருகின்றன.

திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து வரும் சூழலில், திமுக எதிர்கால அரசியல் வியூகத்தை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.எஸ். பாரதி கூறிய கருத்து சாதாரண பேச்சா அல்லது எதிர்கால கூட்டணிக்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக வரவிருக்கும் இடைத்தேர்தல்களை மனதில் வைத்தே இந்த கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இடைத்தேர்தல்
தமிழகத்தில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட பல தொகுதிகளில் அடுத்த சில மாதங்களில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இதனால் இடைத்தேர்தல் குறித்த கூட்டணி பேச்சுகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் தனித்தனியாக போட்டியிடுவதற்குப் பதிலாக, தவெக அரசுக்கு எதிராக பெரிய அரசியல் அணியை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்பது குறித்த ஆலோசனைகள் திமுக மற்றும் அதிமுக வட்டாரங்களில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஆர்.எஸ். பாரதி
இதன் ஒரு பகுதியாகவே ஆர்.எஸ். பாரதி மூலம் திமுக தனது அரசியல் நிலையை சோதித்துப் பார்க்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரசியல் கணக்குப்படி பார்த்தால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியை ஒன்றாக சேர்த்தால் அது இன்னும் கணிசமான பலத்தை கொண்டிருக்கிறது. கடந்த பல தேர்தல்களில் இந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியை பிடித்துள்ளன.
திமுக மற்றும் அதிமுக
கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை விரிந்த அமைப்பு கட்டமைப்பும், நீண்டகால தொண்டர் வலையமைப்பும் இரு கட்சிகளிடமும் உள்ளது. அதனால், தவெகவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தவும் இரு கட்சிகளும் ஏதேனும் வகையில் இணைந்து செயல்படுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. ஆனால் இந்த சாத்தியக்கூறுக்கு பல நடைமுறை சிக்கல்களும் உள்ளன. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக அரசியல் எதிரிகளாகவே இருந்து வருகின்றன.
அடிமட்ட தொண்டர்கள்
இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள். இத்தகைய சூழலில் திடீரென கூட்டணி உருவானால் அதை அடிமட்ட தொண்டர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. அதேநேரத்தில், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற பழமொழியை பல நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. தேசிய அரசியலில் ஒருகாலத்தில் கடுமையாக மோதிய கட்சிகள் கூட பின்னர் கூட்டணியில் இணைந்துள்ளன. தமிழக அரசியலிலும் கடந்த காலங்களில் சாத்தியமற்றதாக கருதப்பட்ட பல கூட்டணிகள் உருவாகியுள்ளன.
எடப்பாடி பழனிசாமி
ஆர்.எஸ். பாரதி தனது கருத்தில், "சட்டமன்றத்தில் திமுகவும் அதிமுகவும் ஒரே வரிசையில் அமர வேண்டிய சூழ்நிலையை காலம் உருவாக்கியுள்ளது" என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. இது வெறும் அரசியல் உவமையா அல்லது எதிர்கால அரசியல் சிக்னலா என்பது குறித்த விவாதமும் தொடர்கிறது. மற்றொரு புறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
அரசியல் வரலாறு
அதிமுக தரப்பிலும் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமான பதில் வராத நிலையில், ஆர்.எஸ். பாரதியின் கருத்து தனிப்பட்ட கருத்தா அல்லது கட்சியின் திட்டமிட்ட சிக்னலா என்பதும் தெளிவாகவில்லை. எனினும், தமிழக அரசியலில் தற்போது உருவாகி வரும் புதிய சூழ்நிலை, பாரம்பரிய அரசியல் வரலாற்றை மாற்றக்கூடிய அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.














Click it and Unblock the Notifications