10 வருஷம் கூப்பு தான்.. திமுக கண்முன் வந்து போன ப்ளாஷ்பேக்! அதிமுகவுடன் கூட்டணிக்கு ரெடியா? ஏன்?
சென்னை: தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் வகையில் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கப் போகிறது என்ற தகவல். திமுக இதனை வெளிப்படையாக மறுத்து இருக்கும் நிலையில், அதிமுக இதுவரை கருத்து சொல்லவில்லை. இந்த நிலையில் தமிழக அரசியலில் இது திராவிட கட்சிகளை எதிர்த்து புதிய கட்சி வரக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பாக மாறியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தது.

இந்த நிலையில், இந்த முறை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலின் மைய சக்தியாக உருவெடுத்துள்ளது. ஆனால், தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லை.
தவெக ஆட்சி அமைப்பு
இதனால், தற்போது தமிழ்நாட்டில் அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கின்றன. 234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், யாருடைய ஆதரவுடன் விஜய் ஆட்சியமைப்பார் என்பது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
விஜய்
இந்த நிலையில், விஜய் தரப்பு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் முதல் வெற்றியாக காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை விஜய்க்கு வழங்கினர். இதையடுத்து விஜய், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
காங்கிரஸ்
அப்போது காங்கிரஸ் ஆதரவு கடிதங்களையும் அவர் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மை எண்ணிக்கை இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படாததால், உடனடியாக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க ஆளுநர் இதுவரை அழைக்கவில்லை. தேவையான ஆதரவை நிரூபித்த பிறகு வருமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்தது.
ஆளுநர்
இதற்கிடையே ஆளுநர் அர்லேகர் அளித்த பேட்டியில், "118 எம்.எல்.ஏ.க்களை நேரில் கொண்டு வாருங்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வகையில் தேவையான எண்ணிக்கையுடன் வந்தால் ஆட்சியமைக்க அழைக்க தயார்" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. மேலும், "திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினாலும் அது அரசியலமைப்புச் சட்டப்படி சாத்தியம்தான்" என்ற அவரது கருத்து தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
திமுக - அதிமுக கூட்டணி
இந்த ஒரு கருத்தே தற்போது தமிழக அரசியலின் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகின்றன. திமுக இதை அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தாலும், அதிமுக தரப்பில் இருந்து தெளிவான மறுப்பு இதுவரை வெளியாகவில்லை. இதுவே பல்வேறு அரசியல் சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ஸ்டாலின்
அதேநேரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியதும் முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. விஜய் ஆதரவு கோரியுள்ள சூழலில், தற்போதைய கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும், அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிட்டிருப்பதும் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது.
எம்ஜிஆர் ஆட்சி
"கட்சியின் நலனுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும்" என்று ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், எதிர்காலத்தில் திமுக எந்த முடிவை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே உருவாகியுள்ளது. இதற்கிடையே, திமுகவில் உள்ள சிலர், விஜய் ஒருமுறை ஆட்சியை பிடித்துவிட்டால் அவரை மீண்டும் அரசியலில் வீழ்த்துவது கடினமாகி விடும் என்ற அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு நீண்டகாலம் திமுக ஆட்சிக்கு வர முடியாத சூழல் உருவானதை அவர்கள் எடுத்துக்காட்டாக பார்க்கின்றனர்.
திராவிட கட்சிகள்
"விஜய் ஆட்சியை அமைத்து விட்டால், அவர் மக்கள் மத்தியில் மேலும் வலுவான தலைவராக மாறி விடுவார். அப்போது திமுக மற்றும் அதிமுக இரண்டுக்கும் எதிர்காலத்தில் பெரிய சவால் உருவாகலாம்" என்ற கணிப்பும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், விஜய்யை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் வகையில் திராவிட கட்சிகள் மறைமுக அரசியல் நகர்வுகளில் ஈடுபடுகின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மறுபுறம், அதிமுக தரப்பிலும் குழப்பமான சூழல் நிலவுகிறது.
தமிழக வெற்றிக்கழகம்
ஒரு தரப்பு விஜய்க்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த, மற்றொரு தரப்பு அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. "தவெகவுக்கு ஆதரவு கொடுத்தால் அதிமுக முற்றிலும் அரசியல் முக்கியத்துவத்தை இழந்து விடும்" என்ற கருத்தும் கட்சிக்குள் பேசப்படுகிறது. இந்த சூழலில், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சி மேற்கொண்டால், அதற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் மிகப்பெரிய அரசியல் மற்றும் சட்ட ரீதியான போராட்டத்தை நடத்த தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டன போராட்டம்
"மக்கள் அதிக இடங்களை வழங்கிய கட்சியை புறக்கணித்து வேறு கூட்டணி ஆட்சியமைப்பது மக்கள் தீர்ப்பை அவமதிப்பதாகும்" என்ற மனநிலையில்தான் தவெக இருப்பதாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால் மக்கள் போராட்டம், சட்டப்போராட்டம், மாநிலம் முழுவதும் கண்டன போராட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் தேர்தல் வருமா?
மேலும், "தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர்; அந்த தீர்ப்பை மாற்ற முயற்சித்தால் மக்கள் அதற்கு தக்க பதில் தருவார்கள்" என்று தவெக நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். இதனால், விஜய் ஆட்சியமைப்பாரா? திமுக - அதிமுக கூட்டணி உருவாகுமா? அல்லது மீண்டும் தேர்தல் வருமா? என்ற கேள்விகளுக்கான பதிலை தமிழகம் முழுவதும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications