யாருக்கு எத்தனை தொகுதி? தயாரான திமுக.. பிப்ரவரி முதல் வாரத்தில் குழுவை அறிவிக்கும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை திமுக பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக் குழு யாருக்கு எத்தனை தொகுதி, எந்த சின்னம் மற்றும் எந்தெந்த தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து மாற்று கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக கூட்டணி இணக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் கட்சி போக்கு காட்டி வந்தாலும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ராகுல் காந்தியிடம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சைலண்ட் மோடில் இருக்கின்றனர்.

திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, கொமதேக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகள் இருந்து வருகின்றனர். அதேபோல் தனியரசு, ஸ்ரீதர் வாண்டையார், தமிழர் தேசம் கட்சி செல்வக்குமார் ஆகியோர் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் அணியுடன் கூட்டணியை பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வருகிறது. இதனால் திமுக எப்படி இத்தனை கட்சிகளிடமும் தொகுதி பங்கீட்டை செய்து முடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்கள் நேர்காணலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால் திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு கூட அமைக்கப்படவில்லை. திமுக எப்போது கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைக்கும் என்ற கேள்வியே கூட்டணியில் உள்ள கட்சிகளில் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க் கட்சிகளின் கூட்டணி இறுதி வடிவம் பெறட்டும் என்று காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திமுக தரப்பில் பிப்ரவரி முதல் வாரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக் குழு யாருக்கு எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதிகள், என்ன சின்னம் என்பதை மாற்று கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கும். அதன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் இறுதி முடிவை எடுப்பார்.
கடந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 177 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதிமுக, கொமதேக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். ஆனால் இம்முறை தனிச் சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக இம்முறை எத்தனை தொகுதிகளில் களமிறங்கும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications