திமுக கூட்டணிக்கு ஆதரவு.. DVK பொதுக்குழுவில் எடுத்த முடிவு! வைகோவின் வலதுகரத்துக்கு சீட் கிடைக்குமா?
சென்னை: திமுக கூட்டணிக்கு மல்லை சத்யாவின் திராவிட வெற்றிக் கழகம் கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் மல்லை சத்யா தொடங்கிய நிலையில், அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோருடன் மல்லை சத்யாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன்பின் வைகோ மற்றும் மல்லை சத்யா இடையில் காரசார மோதல் நடந்த சூழலில், மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டார். இதன்பின் சென்னையில் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.

அப்போதே திமுகவுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறிய மல்லை சத்யா, சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்றாலும், உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியில் சில இடங்களை கோருவோம் என்று தெரிவித்திருந்தார். தற்போது 2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் சூழலில், திராவிட வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்தப் பொதுக்குழு திராவிட வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் மல்லை சத்யாவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன.
தற்போது புதிதாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம், முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சி இணைந்துள்ளன. இன்னும் சில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், எப்படி திமுக தலைமை அனைவரையும் அனுசரித்து தொகுதி பங்கீடு செய்யும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இப்படியான சூழலில், திராவிட வெற்றிக் கழகம் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஏற்கனவே மதிமுகவுக்கு தொகுதி எண்ணிக்கையை குறைக்கும் முடிவில் திமுக இருக்கும் சூழலில், மல்லை சத்யாவுக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications