அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு?
சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்து வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் நிலையில், திமுக கூட்டணியில் தற்போது வரை எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களைப் பார்க்கலாம்..
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் இருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இருந்து செய்யப்பட்டு விட்டது. மேலும் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தொகுதி பங்கிட்டுக்கு ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் தேமுதிகவைக் காரணம் காட்டி கம்யூனிஸ்டுகள் போர்க்கொடி தூக்கியதால், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யுனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராமல் இழுபறியாக நீடித்தது.

2026 சட்டசபை தேர்தல்
இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் மூன்று கட்டமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டு கட்டமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால் திமுக தரப்பில், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதால் தொகுதிகளை குறைத்து கொள்ள வேண்டும் என்று கூறியதால் தான் தாமதம் ஏற்பட்டது.
திமுக கூட்டணி
திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், புதிய திராவிட கழகம்,கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், ஆகியவை உள்ளன.
தொகுதி பங்கீடு
தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் ஒருவழியாக பேச்சுவார்த்தைகள் மூலம் தொகுதி பங்கீட்டை முடித்திருக்கிறது திமுக. திமுகவின் அளித்த தகவலின்படி, கூட்டணியில் மிகப்பெரிய கூட்டாணிக் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ 5 சீட்கள்
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதற்கு இணையான அளவில் தொகுதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3ல் உதயசூரியன் சின்னத்திலும், ஒன்றில் தனிச் சின்னத்திலும் மதிமுக நிற்கிறது.
யாருக்கு எவ்வளவு?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், மனிதநேய மக்கள் கட்சிக்கும் 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை திமுக சின்னத்திலேயே நிற்கவுள்ளன. இன்னும், விசிக, தேமுதிக, தவாக, மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வங்கி அடிப்படையில் சில தொகுதிகளைப் பெறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications