Congress: திமுகவுக்கு தலைவலியாக மாறிய காங்கிரஸ்! ஸ்டாலின் நடத்திய சீக்ரெட் மீட்டிங்! விரைவில் ட்விஸ்ட்?
சென்னை: காங்கிரஸ் கட்சியால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மூத்த அமைச்சர்கள் சிலருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் தனியாக சந்தித்து பேசியது என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய போகிறது. இதனால் இந்த 5 மாநிலங்களுக்கும் சேர்ந்து சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் தமிழகம், புதுவையில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எப்போதும் தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கும் திமுக, இதுவரை தொடங்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூட்டணியில் உள்ள காங்கிரஸ்
இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் கேட்ட போது, "கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியால்தான் இத்தனை சலசலப்பு. ஆட்சியில் பங்கு, 41 சீட், 2 ராஜ்யசபா சீட் கேட்கிறார்கள். இவர்களுக்கே 41 சீட்களை கொடுத்துவிட்டால் மற்ற கட்சிகளுக்கு என்ன செய்வது?
கட்சி மேலிடம்
காங்கிரஸ் கட்சி மேலிடம் என்னதான் கூறினாலும் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசுவோர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதெல்லாம் திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.
பிடிவாதம் ஏன்
காங்கிரஸ் கட்சி ஏன் இத்தனை பிடிவாதம் காட்டுகிறது என்பது குறித்து அறிய முற்பட்டு அக்கட்சி நிர்வாகிகள் சிலரிடம் ஒன் இந்தியா சார்பில் கேட்ட போது, கூடுதல் தொகுதிகளை கேட்பது ஜனநாயக உரிமை, அதை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?
பேச்சுவார்த்தை
எதுவாக இருந்தாலும் அழைத்து பேசினால்தானே தீர்வு வரும், பேச்சுவார்த்தையை திமுக காலம் தாழ்த்தி வருவது குழப்பத்தை அளிக்கிறது. இதனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலின் சென்னை வருகையும் தள்ளிக் கொண்டே போகிறது.
கூடுதல் தொகுதிகள்
ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகளை நாங்கள் கேட்பதற்கு காரணம் எங்களை வைத்து திமுக ஆட்சியை பிடிக்கிறது. ஆனால் இன்னும் நாங்கள் வளராமல் இருக்கிறோம். கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எங்கள் கட்சி 10.69 வாக்கு சதவீதம் பெற்றுள்ளது.
பாஜக
அது போல் போல் பாஜகவோ 11.24 சதவீதத்தை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை விட பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து போயிருக்கிறது. இது எங்களுக்கும், எங்கள் கட்சி தலைமைக்கும் அதிர்ச்சியாக உள்ளது.
திமுக ஆட்சி
எனவே எங்களை வைத்து திமுக ஆட்சிக்கு வரும் நிலையில் எங்களது கட்சி வளர்ச்சிக்கு திமுக எதையும் செய்யவில்லை. இதனால்தான் ஆட்சியில் பங்கு என்பதை கெட்டியாக பிடித்துக் கொண்டுளோம் என்றனர்.
2024 டேட்டா
ஆனால் திமுக என்ன நினைக்கிறது என்றால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் எதிர்க்கட்சியாக இருப்பதற்கே தாங்கள்தான் காரணம் என்பதால் சீட்டை எக்காரணத்தை கொண்டு அதிகரித்துக் கொடுக்க முடியாது என நினைக்கிறதாம்.
இப்படி பிரச்சினை இருக்கும் நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் மாணிக்கம் தாகூர் போன்றோர் திமுக கூட்டணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
புதுவை விவகாரம்
நேற்று கூட புதுவை விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் தலையிட்டு பேசியிருக்கிறார். அங்குள்ள கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து கட்சித் தலைவர்கள் பேசிக் கொள்ளாமல் இவர்களாகவே பேசுவதுதா் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது காங்கிரஸ் கட்சி தொகுதியை அதிகரித்து கேட்டு வருவதால், புற்றில் இருந்து ஈசல் கிளம்புவது போல் ஒவ்வொருவராக கூடுதல் தொகுதிகளை கேட்டு கிளம்புவது திமுகவுக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஆலோசனை
இந்த நிலையில்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்ததும் சில மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாராம்.
அப்போது "தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ் கட்சியை விட்டுவிடலாம். இவர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் வருகின்றன" என்றனராம். அதற்கு ஸ்டாலின், "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது தலைவர் (கருணாநிதி) ஏற்படுத்திச் சென்றது.
வேண்டாம்
எனவே அவர்களை நாமாக வெளியேற்ற வேண்டாம், அவர்களாகவே வெளியேறிவிட்டால் அவர்களுக்கு கொடுக்கும் தொகுதிகள் மிச்சமாகும். அந்த தொகுதிகளை கூடுதல் தொகுதி கேட்கும் மற்றகட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்துவிடலாம்" என்றாராம். ஏற்கெனவே காங்கிரஸை எக்ஸ்ட்ரா லக்கேஜ் என திமுகவினர் கூறி வருகிறார்கள். இனி இந்த லக்கேஜை திமுக சுமக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications