சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பேராசிரியர் அன்பழகன்.. சந்திக்க தொண்டர்களுக்கு திமுக தடை
சென்னை:அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இல்லம் திரும்பினார்.
திமுக பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் பேராசிரியர் க.அன்பழகன், சமீப காலமாக வயது முதிர்வால் அவதிப்பட்டு வந்தார். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
அக்டோபர் 20ம் தேதி அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தற்போது வீடு திரும்பினார். உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வரும் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனை சந்திக்க, தொண்டர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று திமுக கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக பொதுச்செயலளார் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அவரது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க, வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.