4 மீனவர்கள் கொலை.. ஓரணியில், திமுக-அதிமுக எம்.பி.க்கள்.. வலுவான மெசேஜ் அனுப்புமா மத்திய அரசு?
சென்னை: தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசுக்கு 'வலுவான செய்தி' (Strong message) அனுப்ப வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ராஜ்யசபாவில் கேட்டுக்கொண்டார். அதிமுக சார்பிலும் இதே போன்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
சமீப காலமாக இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களை தாக்கி சிறைபிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்திலிருந்து சென்ற மீனவர்கள் படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் மூழ்கடித்தது. இதில் 4 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தை, சமீபத்தில், ராஜ்யசபாவில் திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் எழுப்பியிருந்தனர். திமுக சார்பில் திருச்சி சிவா பேசுகையில், இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பும் சரி, இப்போதும் சரி நாங்கள் பலமுறை இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறோம். தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது தொழிலை விட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு இலங்கை கடற்படையினர் எல்லை மீறிக் கொண்டு செல்கிறது.
இப்போது தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெற கூடாது. இந்த பிரச்சனையை நீங்கள் தீவிரமாக முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வலுவான மெசேஜ் பிரதமரிடம் இருந்து இலங்கைக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் நமது மீனவர்களுக்கு நம்பிக்கையுடன் தொழில் செய்வதற்கு மன வலிமை கிடைக்கும், என்று தெரிவித்தார்.
அதிமுக சார்பில் பேசிய மூத்த எம்பி தம்பிதுரை, இதுவரை தமிழகத்திலிருந்து 245 மீனவர்கள் இலங்கையால் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக சார்பில், தமிழக அரசின் சார்பில் மற்றும் தமிழ்நாடு மீனவர்கள் சார்பில் இலங்கை கடற்படைக்கு கடும் கண்டனத்தை நான் பதிவு செய்கிறேன். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவை இதுபோன்ற கொலைகள் பாதிக்கும் என்று தெரிவித்தார்.
உறுப்பினர்களின் கண்டனம் பதிவு செய்யப்பட்ட நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், தமிழக மீனவர்கள் கொலையை தொடர்ந்து, இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கொலை செய்யப்பட்டது ஏற்க முடியாத செயல் என்று தெரிவித்தார்.