திமுக - பாஜக கூட்டணி யூகங்கள் அதிகரிக்க காரணம் என்ன? இதோ லிஸ்ட்!
சென்னை: தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசு பொருளாகி இருக்கக்கூடிய விஷயம் கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியில் பாஜக தலைவர்களும் திமுக தலைவர்களும் காட்டிய நெருக்கம்தான். 1999 வாஜ்பாய் தலைமையில் நடந்த பாஜக-திமுக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலம் கண் முன்பு வந்து போவதை போல தெரிந்ததாக, திமுகவில் ஒரு தரப்பினரே சமூக வலைத்தளங்களில் புலம்பும் நிலையை உருவாக்கி இருக்கிறது இந்த நிகழ்வுகள்.
கூட்டத்தில் பின்னால் நின்று கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முன் வரிசைக்கு வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைக்க, கனிமொழி அவருக்கு வழிவிட்டு முன்வரிசைக்கு கொண்டு வந்து நிறுத்த என.. சகோதர பாச சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு அந்த நிகழ்வுகள் நடந்தேறியது பாஜகவில் உள்ள திமுக தீவிர எதிர்பாளர்களுக்கே தீவிரமான அதிர்ச்சியை அளித்துள்ளது.

இப்படியாக, இரு கட்சியிலும் உள்ள குறிப்பிட்ட சதவீதத்தினர் ரசிக்காத நிகழ்வாக இந்த நிகழ்வுகள் மாறியிருந்தாலும், எங்களுக்குள் எந்த ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது.. முழுக்க முழுக்க இது அரசு நிகழ்ச்சி மட்டுமே என்று ஆணித்தரமாக கூறுகின்றனர் திமுகவின் மேல்மட்ட தலைவர்கள்.
பாஜக-திமுகவின் நெருக்கம் இவ்விரு கட்சியினரை மட்டுமல்லாது அதிமுகவையும் ஆட்டிப் பார்த்துள்ளது. அதிமுக-பாஜக கள்ள உறவு வைத்துக் கொண்டு இருக்கிறது என்று இத்தனை நாட்களாக கூறி வந்தீர்களே, ஆனால் இப்போது நீங்கள் செய்வது என்ன? என்ற தொனியில் எடப்பாடி பழனிச்சாமி முதல் அத்தனை நிர்வாகிகளும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.
இந்த சந்தேக பேச்சுக்கள் கலைஞரின் நாணய வெளியீட்டு விழாவால் மட்டுமே வந்தது கிடையாது. கருணாநிதி நினைவாக மெரினா கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போது, மத்திய அரசு அதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்தது.
செந்தில் பாலாஜி தவிர திமுகவின் மற்ற அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் பெரிய அளவில் வேகம் பிடிக்கவில்லை. நேற்றும் கூட கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி அவரது நினைவிடத்துக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்.

என்னதான் அரசு வேறு, கட்சி வேறு என்று சொன்னாலும் கூட, கலைஞர் என்று பாராட்டி வாழ்த்தி தள்ளி இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அரசு நிகழ்ச்சி என்பதால் மாண்புடன் நடந்து கொள்கிறோம் என்று திமுக தரப்பில் சொன்னாலும் கூட, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வந்த போது கருப்பு பலூன் பறக்க விட்டது, வலைத்தளங்களில் அவருக்கு எதிராக திரும்பிச் செல்லுமாறு ஹேஷ் டேக் உருவாக்கியது போன்றவற்றை சுட்டிக்காட்டும் எதிர்த்தரப்பினர், அப்போது மட்டும் மோடி என்ன, பாஜக தலைவராகவா வந்தார், பிரதமராக தானே வந்தார்? இந்த நியாயத்தை ஏன் அப்போது பேசவில்லை என்று கேட்பதை பார்க்க முடிகிறது.

10 வருடங்களுக்கு மேலாக மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க முடியாத நிலைமையில் திமுக இருக்கிறது.. நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இரண்டு பேரை பாஜக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இந்த இரண்டு புள்ளிகளையும் இணைத்து பார்த்து கான்ஸ்பிரசி தியேரிகள் எழுதப்பட்டு வருகின்றன. வாஜ்பாய் அரசுக்கு கருணாநிதி ஆதரவளித்த போது, "நல்ல மனிதர் தவறான கட்சியில் இருக்கிறார்" என்று ஒரு காரணத்தைச் சொல்லி ஆதரவு தந்தார். ஆனால் திமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்த அண்ணாமலையை முன் வரிசைக்கு அழைத்து நிறுத்தியதும், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றதன் மர்மம்தான் புரியவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
திராவிடம் என்பது மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி என்று ஆளுநர் ரவி பேசி ஒரு நாள் கூட கடந்து இருக்காத நிலையில், தேனீர் விருந்தில் முதல்வரும் மூத்த அமைச்சர்களும் பங்கேற்றனர். அண்ணாமலையும் அமைச்சர் வேலுவும் ஒரு நிமிடத்திற்கு மேலாக, கைகுலுக்கி மகிழ்ந்தனர். ஸ்டாலினை டேஞ்சரானவர் என்று விமர்சித்து வந்த, பாஜக தலைவர் எச். ராஜா, அதே ஸ்டாலினுக்கு வாஞ்சையாக கை கொடுத்தது என பல காட்சிகள் கடந்த சில தினங்களில் அரசியல் பார்வையாளர்கள் கண்முன்பு வந்து போகின்றன.
கருணாநிதி புகழை பாஜக தலைவர்களை பாட வைத்தோம் பார்த்தீர்களா என்று திமுகவில் ஒரு தரப்பும், ஆடு என்று விமர்சித்த உங்களையே, அண்ணாமலையை அருகில் அழைத்து நிற்க வைத்தோம் பார்த்தீர்களா என்று பாஜகவில் ஒரு தரப்பும் இப்போதும் விளையாட்டு சண்டை போட்டு வருகின்றனர். ஆனால் இவையெல்லாம் அவரவர் கட்சியின் கவுரவத்தை காப்பாற்றுவதாக நினைத்து வைக்கும் வாதங்களே தவிர, மேலிடத்தின் மூவ்கள் பாவம் இவர்களுக்கும் தெரியவில்லை. ஏன்.. யாருக்குமே தெரியவில்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications