திமுக மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு..! நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக கேஎஸ் மூர்த்தி நியமனம்!
சென்னை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த எஸ்.எம்.மதுரா செந்தில் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.மூர்த்தியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் எஸ்.எம். மதுரா செந்தில் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கே.எஸ்.மூர்த்தி (1/125எப், குடி தெரு, கொத்தமங்கலம் அஞ்சல், பரமத்திவேலூர் வட்டம், நாமக்கல் 637213) நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.மதுரா செந்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக திமுக மாநில வர்த்தக அணி துணைத் தலைவரும், பரமத்தி வேலூர் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில், பல்வேறு மாவட்டங்களில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அதுகுறித்து தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை அடைவதற்கான நிர்வாக வசதிக்காகத்தான் மாவட்டக் கழக நிர்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.

சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுகாலமே இடையில் உள்ளதால் அதற்கேற்ப களப் பணிகள் அமைந்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களும் அதற்கேற்ற வகையிலான நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல இன்னும் சில அறிவிப்புகளையும் உடன்பிறப்புகள் எதிர்பார்க்கக்கூடும். கட்சியின் நலன் கருதி இத்தகைய முடிவுகள் தொடரும்." எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications