"அம்மா.. வெளியே வாங்க" வீடு இடிவதற்கு முன் 24 குடும்பங்களை காத்த திமுக நிர்வாகி.. நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: சென்னை திருவொற்றியூரில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. வெறும் 20 வருடங்கள் கூட ஆகாத அடுக்குமாடி குடியிருப்புகள் பொத்தென்று இடிந்து விழுந்தது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் தரம் மீதான கேள்விகளை எழுப்பி உள்ளது. சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் 1993ல் கட்டப்பட்டு 1998ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த குடிசை மாற்று வாரிய கட்டிடம்தான் இடிந்து விழுந்தது.
இங்கு பி பிளாக்கில் இரண்டு நாட்களுக்கு முன் விரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அப்படியே இடிந்து கீழே விழுந்தது. மொத்தமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த நிலையில்தான் இந்த இடிபாட்டிற்கு முன் 24 குடும்பங்களை திமுக நிர்வாகி ஒருவர் காத்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
திருவொற்றியூர் கட்டிட விபத்து.. குளத்தின் மீது கட்டப்பட்டதா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு?
என்ன நடந்தது?
நேற்று முதல் நாள் இந்த கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் அதற்கு முதல் நாளே இந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பி பிளாக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வசித்த மக்கள் அதை பற்றி பெரிதாக கவலைப்படாமல் உறங்க சென்றுள்ளனர். இதையடுத்து அதிகாலையில் விரிசல் பெரிதாகி உள்ளது. உடனே அப்பகுதி திமுக வட்டசெயலாளர் தனியரசுவிற்கு அதிகாலையில் தகவல் சென்றுள்ளது.
தனியரசு
திமுக வட்டசெயலாளர் தனியரசு தகவல் கேட்டதும் அங்கு திமுக நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு வந்து பார்வையிட்டு இருக்கிறார். காலையிலேயே வந்து கட்டிடத்தை பார்த்தவர் 4வது மாடியில் ஆய்வு செய்து இருக்கிறார். அப்போது கட்டிடத்தில் விரிசல் பெரிதானதை தனியரசு கவனித்து இருக்கிறார். அதோடு கட்டிடத்தின் உள்ளே மண் விரியும் சத்தமும் கேட்டு இருக்கிறது.
திருவொற்றியூர் கட்டிடம்
கட்டிடம் மிக மிக லேசாக குலுங்க தொடங்கியதையும் கவனித்து இருக்கிறார் தனியரசு. இதனால் உடனே சுதாரித்த தனியரசு மின்னல் வேகத்தில் ஒவ்வொரு மாடியாக சென்று.. 24 வீடு கதவுகளையும் தட்டி அம்மா வெளியே வாங்க.. அம்மா சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வெளியே போங்க என்று கத்தி இருக்கிறார். அப்போது அங்கு 75 -80 பேர் இருந்துள்ளனர்.
பெண்கள்
பல பெண்கள், வயதானவர்கள் இருந்துள்ளனர். மக்களை பதற்றத்திற்கு உள்ளாக்க கூடாது என்பதால் கட்டிடம் உடைய போகிறது என்று மட்டும் சொல்லாமல்.. பாதுகாப்பிற்கு கீழே செல்லுங்கள்.. பிறகு பார்க்கலாம் என்று கூறி உள்ளார். கொஞ்சம் திட்டிதான் பலரை வெளியேற்ற வேண்டி இருந்துள்ளது.
Recommended Video
திருவொற்றியூர் கட்டிடம் இடிந்தது
இந்த நிலையில்தான் இவர் எல்லோரையும் வெளியேற்றிய சில நிமிடங்களில் மொத்தமாக அந்த கட்டிடம் விழுந்து தரைமட்டமானது. மின்னல் வேகத்தில் செயல்பட்ட இவரின் செயலால் அந்த கட்டிடம் இடிந்த போது ஒருவரும் பலியாகாமல் எல்லோரும் காப்பாற்றப்பட்டனர். இவரின் செயலால் 24 குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் இவரின் கையை பிடித்து கண்ணீரோடு நன்றி தெரிவித்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.