"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா
சென்னை: ''என்னடா மக்கள் இப்படி செய்துவிட்டார்கள் என்று மக்கள் மீது வெறுப்பு கக்காமல் அடுத்த நாளே கொளத்தூர் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தவர் தலைவர் ஸ்டாலின். இப்படிப்பட்ட ஒரேயொரு தலைவனை இந்த நாடு எந்த காலத்திலாவது பார்த்து உள்ளதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதற்கு காரணம் என்ன? கொள்கை பிடிப்பு. தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அசைக்க முடியாத நம்பிக்கை. திமுககாரன் என்றால் எப்போதுமே ஒரு திமிர் இருக்கத்தான் செய்யும். திமுககாரனால் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்'' என்று முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை தழுவி உள்ளது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான பணிகளை திமுக தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் 'ஜென் ஸி' தலைமுறையை ஈர்க்கும் வகையிலும் அவர்களிடம் திமுகவின் கருத்துகளை கொண்டு சேர்க்கும் நோக்கத்திலும் GenZ DMK Meetup என்பது சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

இந்த மீட்டிங்கில் ஏராளமான 'ஜென் ஸி' தலைமுறையை சேர்ந்தவர்கள். பங்கேற்றனர். திமுக தலைவர்கள் மீட்டிங்கில் பங்கேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா இந்த மீட்டிங்கில் பேசியதாவது:
''என்னடா மக்கள் இப்படி செய்துவிட்டார்கள் என்று மக்கள் மீது வெறுப்பு கக்காமல் இன்னும் மக்களுக்கு நிறைய சொல்ல வேண்டியது இருக்கிறது போல் என்று அடுத்த நாளே தலைவர் (ஸ்டாலின்) கொளத்தூர் மக்களை சந்தித்தார். எவ்வளவு பெரிய பின்னடைவு அது. ஆனால் அடுத்த நாளே கொளத்தூர் சென்று மக்களை சந்தித்து நன்றி கூறினார். இப்படிப்பட்ட ஒரேயொரு தலைவனை இந்த நாடு எந்த காலத்திலாவது பார்த்து உள்ளதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அதற்கு காரணம் என்ன? கொள்கை பிடிப்பு. தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அசைக்க முடியாத நம்பிக்கை. பற்று, பாசம் எல்லாம் தாண்டி எந்த காலத்திலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுககாரனை விட்டால் வளர்ச்சியில்லை என்ற முழு நம்பிக்கை தான். நான் என்றைக்கும் சொல்வது தான். திமுககாரன் என்றால் எப்போதுமே ஒரு திமிர் இருக்கத்தான் செய்யும். திமுககாரனால் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். நீங்கள் கொடுத்த கொஞ்ச கொஞ்ச காலத்திலேயே தமிழகத்துக்கு வளர்ச்சியை கொடுத்ததற்கு பல சான்றுகளை எங்களால் கொடுக்க முடியும்'' என பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications