வாரிசுகளுக்கே வாரி வாரி கொடுத்தால் என்ன நியாயம் இது.. குமுறும் அடிமட்ட திமுக தொண்டர்கள்!
Recommended Video
சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து இரு அணிகளிலும் எந்த, எந்த கட்சிகள் என்பது முடிவாகிவிட்ட சூழலில் கட்சிகளில் போட்டியிட சீனியர் தலைவர்கள் முதல் அவர்களின் வாரிசுகளும் முட்டி மோதி வருகின்றனர். திமுகவில் இந்த போட்டி சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இப்படி வாரிசுகள் போட்டியிடுவது திமுகவுக்கு தேர்தலில் எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை தரும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்கள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஐ,ஜே,கே., கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு இடம் என இருபது இடங்கள் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது போக மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிட உள்ளது.
இந்த இருபது இடங்களில் பெரும்பாலான இடங்களை மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரின் வாரிசுகள் கேட்டு வருகின்றனர். கருணாநிதி குடும்பத்தில் கனிமொழி, தயாநிதிமாறன், ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதோடு இவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. வேலூர் தொகுதியை தனது மகன் கதிருக்கு கடந்த மக்களவை தேர்தலில் இருந்தே கேட்டு திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார், திமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன்.
திட்டமிட்டு காய் நகர்த்திய திமுக.. துரைமுருகனை வைத்து தேமுதிகவில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்!
மகன்களின் குவியல்
இம்முறை வேலூர் கதிருக்கு ஒதுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. இதுபோல கள்ளக்குறிச்சி தொகுதியை முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகன் கவுதம சிகாமணிக்காக கேட்டு வருகிறார். வடசென்னையை ஆற்காடு வீராசாமி தனது மகன் கலாநிதிக்கு கேட்கிறார். அதுபோல தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னையை கேட்கிறார். பொங்கலூர் பழனிசாமியின் மகன் பாரிக்காக பொள்ளாச்சி தொகுதியை கேட்டு வருகிறார்கள். திருவண்ணாமலை தொகுதியை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்காக கேட்டு வருகிறார். அதோடு முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தனது வாரிசுக்கும் தொகுதி கேட்டு வருகிறார்.
தயாநிதி கனிமொழி
தூத்துக்குடியில் கனிமொழியும், சென்னையில் தயாநிதிமாறனும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. திமுக போட்டியிடவுள்ள 20 தொகுதிகளில் ஏறத்தாழ 10 தொகுதிகளை தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் வாரிசுகள் கேட்டு வருவதால் தலைமை என்ன செய்வது என்று தவித்து வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய திமுக தொண்டர் ஒருவர் காலம் காலமாக நாங்கள் இந்த கட்சிக்கு உழைத்து வருகிறோம். கட்சியின் சின்ன சின்ன கூட்டங்கள் முதல் பெரிய கூட்டங்கள் வரை எங்கள் கை காசையே செலவழித்து வருகிறோம்.
கட்சியினர் குமுறல்
இதெல்லாம் நமக்கும் ஒரு வாய்ப்பு வரும் என்றாவது ஒருநாள் நாமும் மக்கள் பிரதிநிதி ஆவோம் என்ற எண்ணத்தில்தான் இதையெல்லாம் செய்து வருகிறோம். ஆனால் தேர்தல் என்று வரும்போது கட்சியின் மாவட்ட செயலாளர்களும் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தால் எங்களுக்கு என்றுதான் விடிவு காலம் வரும்? துரைமுருகன் கட்சியின் பொருளாளர், பொன்முடி உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் இப்படி எல்லாம் பதவிகளில் இருந்துகொண்டே தங்களின் வாரிசுகளுக்கும் இடம் கேட்கிறார்கள் என்றால் திமுக இவர்களுக்கும் இவர்களின் வாரிசுகளுக்கும் மட்டும்தானா என்று கேள்வி விடுக்கிறார்.
குவியும் குடும்பங்கள்
திமுகவில் இப்போதே தூத்துக்குடி பெரியசாமியின் மகள் கீதா ஜீவன் தற்போது எம்.எல்.எ வாக இருக்கிறார். இதற்கு முன்னர் அமைச்சராக இருந்தார். டி.ஆர்.பாலுவின் மகன் தற்போது எம்.எல்.எ வாக இருக்கிறார். அதுபோல ஐ.பெரியசாமியின் மகன் என பலரும் தங்களது வாரிசுகளுக்கு பதவிகளை பெற்று கொடுத்துள்ளனர். இந்த வெறுப்பு கடைமட்ட தொண்டர்கள் வரை அனைவரிடமும் உள்ளது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை வாரி வழங்கிவிட்ட திமுக மீதமுள்ள 20 தொகுதிகளில் பாதிக்குமேற்பட்ட தொகுதிகளை தலைவர்களின் வாரிசுகளுக்கு வாரி வழங்கினால் தொண்டர்கள் எப்படி உற்சாகத்தோடு வேலை செய்வார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர் அடிமட்ட தொண்டர்கள்.
வேலைக்கு மட்டும் நாங்களா
போட்டியிடுவது தலைவர்களின் வாரிசுகள் என்றாலும் பூத் லெவலில் வேலை செய்யவேண்டியது என்னவோ அடி மட்ட தொண்டர்கள் என்பதால் இப்போதே தொண்டர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை காண முடிகிறது.தொண்டர்களின் இந்த உணர்வுகளை திமுக தலைமை உணர்ந்து கொள்ளுமா என்பதே இப்போது திமுக தொண்டர்களிடம் உள்ள மில்லியன் டாலர் கேள்வி