காவிரிய வச்சிக்கோ.. அம்மாவை குடு.. அதிமுகவின் ரணகள போஸ்டரை எடப்பாடிக்கு நினைவுபடுத்தும் திமுகவினர்!
சென்னை: காவிரி நீரைப் பெற அதிமுக தான் உண்மையாகவே பாடுபட்டது என எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில், ஒரு பழைய போஸ்டரை எடப்பாடி பழனிசாமிக்கு நினைவூட்டியுள்ளனர் திமுகவினர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அதிமுக,பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதேசமயம், காவிரி விவகாரத்தில் திமுக அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக் காலத்தில் அன்றைய அதிமுக எம்பிக்கள் 22 நாட்கள், அவையை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர். இப்போது ஆட்சியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் 38 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். காவிரி விவகாரத்தில் என்ன அழுத்தம் கொடுத்தார்கள்? தமிழகத்துக்கான உரிமையைப் பெற இவர்கள் என்ன செய்தார்கள்? என்று காட்டமாக விமர்சித்தார்.
மேலும், "அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்தது. இதுக்கு எல்லாம் ஒரு தில்லு, திராணி வேண்டும். அது இந்த அரசிடம் இல்லை. ஏதோ மேலோட்டமாக பேசிக் கொண்டுள்ளனர்." என விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், திமுகவினர் சமூக வலைதளங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது, இங்கு அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை நினைவுகூர்ந்து அதிமுகவை விமர்சித்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக தனி நீதிமன்றம்அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார் மதுரையைச் சேர்ந்த கிரம்மர் சுரேஷ். "காவிரிய வச்சுக்கோ, அம்மாவைக் குடு" என்று தமிழகமே தேம்புவதாக போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கிரம்மர் சுரேஷ்.
காவிரி பிரச்சினையை சிறுமைப்படுத்தி அதிமுகவினர் ஒட்டிய இந்த போஸ்டர் டெல்டா விவசாயிகளைக் கொதிக்கச் செய்தது. காவிரிப் பிரச்சினையில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வர தமிழ்நாடு பட்ட பாடு என்ன? செத்துப் போன விவசாயிகள் எத்தனை பேர், எத்தனை போராட்டங்கள், எத்தனை வழக்குகள், வேதனைகள்? இவற்றையெல்லாம் சிறுமைப்படுத்தும் வகையில், அவர்களின் தலைவிக்காக நம் உரிமையை விட்டுக்கொடுப்பதாக போஸ்டர் அடிப்பதா? என பலரும் வெகுண்டெழுந்தனர்.

இந்த போஸ்டரை இப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, "காவிரிய வச்சுக்கோ... அம்மாவை கொடு" என கேவலமாக அரசியல் செய்த அதிமுகவினர் தான் இன்று, உண்மையாகவே காவிரி நீரை சட்டப்பூர்வமான வழிகளில் பெற்றுத் தரப் போராடும் திமுகவை, திமுக நாடகம் போடுகிறது என விமர்சிக்கிறார்கள்" என திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அதிமுக - திமுகவினர் கருத்து மோதல் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications