போட்டியின்றி ராஜ்ய சபாவுக்கு தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்.. சுயேச்சை மனுக்கள் நிராகரிப்பு
சென்னை: மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 எம்பி இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
மக்களவை தேர்தலைப் போல மாநிலங்களை உறுப்பினர்களைப் பொதுமக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக மாநிலச் சட்டசபை மூலமே மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்
தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் மாநிலங்களவைக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டசபைத் தேர்தலுக்கு முன் திமுகவுக்கு 7 உறுப்பினர்களும் அதிமுகவுக்கு 8 உறுப்பினர்களும் இருந்தனர்.
எம் எம் அப்துல்லா
இந்தச் சூழலில் கடந்த மார்ச் மாதம் அதிமுக சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த முகமது ஜான் உயிரிழந்தார். இதையடுத்து இதற்கான இடைத்தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்குப் பெரும்பான்மை இருந்ததால், திமுக சார்பில் எம் எம் அப்துல்லா மாநிலங்களவைக்கு எம்பி-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மாநிலங்களவை எம்பி எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது.
அதிமுக எம்பிகள் ராஜினாமா
அதேபோல அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும் சட்டசபைத் தேர்தலிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். வேப்பனஹல்லி தொகுதியில் கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்தியலிங்கமும் வெற்றி பெற்றனர். இதையடுத்து இருவருமே தங்கள் எம்பி பதவிகளைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல்
இந்த இடைத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் நேற்றே கடைசி நாளாகும். இதில் திமுக சார்பில் கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 21ஆம் தேதி வேட்பு மனு செய்தனர். இவர்களைத் தாண்டி 3 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
போட்டியின்றி தேர்வு
இந்த மனுக்களைத் தேர்தல் நடத்தும் அதிகாரியான சீனிவாசன் பரிசீலனை செய்தார். அதில் சுயேச்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், பத்மராஜன், புஷ்பராஜ் ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்ட. சட்டசபை உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் அவர்கள் மூவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் திமுக வேட்பாளர்கள் கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வாவது உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10ஆக உயர்ந்துள்ளது.