தலைகீழாக மாறும் களம்.. சென்னைக்கு அதிமுக.. கோவையில் எகிறும் திமுக.. டிரெண்ட் அடியோடு மாறுது?
சென்னை: தமிழகத்தின் இரு பெரும் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் கோவையில் இந்த முறை தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது. பொதுவாகச் சென்னையை திமுகவின் கோட்டையாகவும், கோவையை அதிமுகவின் பலமான இடமாகவும் கருதுவது வழக்கம். ஆனால், வரும் தேர்தலில் இந்த இரு நகரங்களிலும் நிலைமை கொஞ்சம் தலைகீழாக மாற வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சென்னையில் திமுகவிற்கு கடும் சவால்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக தன்வசப்படுத்தியது. ஆனால், இந்த முறை அதே வெற்றியைத் தக்கவைப்பது அத்தனை எளிதல்ல என்பது தற்போதைய நிலவரம் காட்டுகிறது. குறிப்பாக, திரு.வி.க நகர், தியாகராய நகர் (T. Nagar), பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுக கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.
திரு.வி.க நகர்:
இங்கு மறைந்த பி.எஸ்.பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை அதிமுக கூட்டணி வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் கொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலை மற்றும் ஆளுங்கட்சி மீதான கோபத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "நாங்கள் செய்த சாதனைகளை முன்வைத்து வாக்கு கேட்கிறோம், அனுதாப அலை வேலை செய்யாது" என்று திமுக வேட்பாளர் கே.எஸ். ரவிச்சந்திரன் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
தியாகராய நகர் மற்றும் பெரம்பூர்:
தியாகராய நகரில் அதிமுகவின் பி. சத்யநாராயணன், திமுகவின் ராஜா அன்பழகனுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளார். அதேபோல், பெரம்பூர் தொகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வருகை ஆட்டத்தையே மாற்றியுள்ளது. ஏற்கனவே வலுவான வேட்பாளராகக் கருதப்படும் திமுகவின் ஆர்.டி. சேகருக்கு, இப்போது இது ஒரு முக்கோணப் போட்டியாக மாறியுள்ளது.
இவை தவிர எழும்பூர், ஆர்.கே. நகர், ராயபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளிலும் தேர்தல் களம் முன்பை விடச் சூடுபிடித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னைக்காகத் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரம்மாண்ட சாலைப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்.
கோவையில் திமுகவின் அதிரடி முன்னேற்றம்
சென்னைக்கு நேர்மாறாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவையில் இம்முறை திமுக பலமான சவாலை அளித்து வருகிறது. இத்தேர்தல் கிட்டத்தட்ட எஸ்.பி. வேலுமணி மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கு இடையிலான கௌரவப் போராக மாறியுள்ளது.
குறிப்பாக, கோவை தெற்கு, கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கடும் போட்டியை எதிர்கொள்கிறது.
கோவை தெற்கு: இந்தத் தொகுதியில் செந்தில் பாலாஜி நேரடியாகக் களமிறங்கியுள்ளது அதிமுகவின் அம்மன் அர்ஜுனனுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
கோவை வடக்கு: இங்கு பாஜகவின் வானதி சீனிவாசனை எதிர்த்து திமுகவின் செந்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். கடந்த 2021 தேர்தலில் வெறும் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் இழந்த இந்தத் தொகுதியை, இம்முறை மக்கள் ஆதரவுடன் கண்டிப்பாகக் கைப்பற்றுவோம் என்று திமுக நம்பிக்கையுடன் உள்ளது.
முடிவு என்னவாகும்?
2021-ல் சென்னை 16-0 என்றும், கோவையில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களையும் கைப்பற்றியது. ஆனால், 2026-ன் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டுள்ளது. சென்னையில் நிலவும் அதிருப்தி மற்றும் அனுதாப அலைகளும், கோவையில் திமுக மேற்கொண்டுள்ள தீவிரமான களப்பணியும் தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
யார் கோட்டை தகரப் போகிறது, யாருக்குப் புதிய வெற்றி கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications