1.30 லட்சம் இளைஞர்கள்.. வடக்கு மண்டலத்தை தட்டி தூக்கும் திமுக.. ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய மெசேஜ்
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளன. திமுக கட்சி ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. திமுக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்தியாவில் இன்றைக்கு தமிழ்நாடு தனித்தன்மையோடு இருக்கிறது. அந்த சகாப்தத்திற்குள் நீங்களும் வரப்போகிறீர்கள் என்று நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது. என்று நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் நாளை நடைபெறவுள்ளது.

திமுக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம்
இதுகுறித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், 'வணக்கம். நல்லாருக்கீங்களா. வருகிற ஞாயிற்றுக்கிழமை இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் நடக்க போவதாக அறிவிக்கப்பட்டிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், கழகத்தின் தலைமை தொண்டன் என்ற அடிப்படையில் உங்களை முறையாக அழைக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவில் பேசுகிறேன்.
நம் எல்லோரையும் உடன் பிறப்பு என்றழைக்க காரணம் என்ன தெரியுமா. எல்லா குடும்பங்களிலும் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இருப்பார்கள். அதேபோல எல்லோரும் பாசத்துடன் அழைக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் உடன்பிறப்பே என்று உறவு கொண்டாடுகிறோம். நம் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி உங்கள் எல்லோரையும் கொள்கை அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று பாசறை தொடங்கி அறிவு திருவிழா உள்ளிட்ட ஏராளமான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
திராவிடம் எனும் மாபெரும் சித்தாந்தம்
அதேபோல களத்தில் வேலை செய்ய நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளோம் என்று உங்களின் பெயர் பட்டியலை என்னிடம் காண்பித்தார். அதை பார்த்தபோது 45 வருடங்களுக்கு முன்பு 1980 ஆம் ஆண்டு இளைஞரணி தொடங்கினோம். அப்போது எங்களுக்கு எப்படி பெருமையாக இருந்ததோ அப்படி பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தது. இளைஞர்களாக பொறுப்புக்கு வந்திருக்கும் உங்களுக்கு திராவிடம் எனும் மக்களுக்கான மாபெரும் சித்தாந்தத்தை பேசப் போகிறீர்கள்.
திமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை அடுத்தடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்லும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, தமிழின உயர்வுக்காக போராடும் மாபெரும் கடமை வந்திருக்கிறது. இந்தியாவில் இன்றைக்கு தமிழ்நாடு தனித்தன்மையோடு இருக்கிறது. அந்த சகாப்தத்திற்குள் நீங்களும் வரப்போகிறீர்கள் என்று நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது. சென்னையில் அறிவு திருவிழா நடத்தியபோது, என்னடா இங்கு மட்டும் இப்படி நடத்துகிறார்களே, மற்ற பகுதியிலும் இப்படி நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
திரவிடியன் ஸ்டாக்
தம்பி உதயநிதி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக்கான அழைப்பிதழை கொடுத்தார். அங்குள்ள கட்சி ரீதியாக உள்ள 29 மாவட்டங்கள், 91 தொகுதிகளில் இருந்து 1,30,000 இளைஞர்கள் வருகின்றனர் என்றபோது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டின் தலைமகன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் பேசும்போது, நான் திரவிடியன் ஸ்டாக் என்று அ டையாளப்படுத்திக் கொண்டார். ஞாயிறன்று சந்திப்போம். புதிய திரவிடியன் ஸ்டாக்குகளை வரவேற்கிறேன்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications