பொய் செய்திகளை பரப்ப பாஜக தனி கணக்குகளை வைத்திருக்கிறது.. திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை: தோழமை சக்திகளோடு சிண்டுமுடிகிற வேலையில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவார்கள் என்றும், அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் கொடுக்க கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். பொய் செய்திகளை பரப்ப பாஜக ரைட் விங் கணக்குகளை நடத்தி வருவதாக விமர்சித்துள்ள ஸ்டாலின், பொய் செய்திகளை பரப்பினால் உரிய ஆதாரத்தோடு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக ஒவ்வொரு நாளும் பல்வேறு கட்ட பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே இளைஞரணி மற்றும் மகளிரணி கூட்டத்தை மண்டல வாரியாக நடத்திய திமுக, இன்று ஐடி விங் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டிலேயே பூத் அளவில் டிஜிட்டல் ஏஜெண்டுகளை வைத்திருக்கும் ஒரே அரசியல் கட்சி திமுக மட்டும்தான்.

திமுக தான் கிங்
ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப் லைனிலும் அசத்தும் அணியாக திமுக ஐடி விங் இருக்கிறது. ஆன்லைனில் உங்கள் வேலை ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வது மட்டும் கிடையாது. அஜண்டாவையும் நம்ம தான் செட் செய்ய வேண்டும். ஏனென்றால் கண்டெண்டில் கிங் திமுக தான். நம்மை களங்கப்படுத்தி, தமிழ்நாட்டிற்குள் நுழைய எதிரிகள் நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அவதூறுகள்.
அட்டாக் செய்யுங்கள்
அவதூறுகளை பரப்புவோருக்கு பதில் சொல்லிக் கொண்டே இருக்காமல், ஆக்கப்பூர்வமாக பணிகளையும் செய்ய வேண்டும். டிஃபென்ஸ் மட்டும் ஆடிக் கொண்டிருக்க கூடாது. சில நேரம் அட்டாக் மோடிலும் விளையாட வேண்டும். திமுக நிறைய திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் எவ்வளவோ பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. நம் சாதனைகளை தான் பேசு பொருளாக இருக்க வேண்டும்.
பொய் செய்திகள் பரப்பும் பாஜக
தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்கி, அதில் குளிர்காய எதிரிகள் நினைக்கின்றனர். கடந்த 5 மாதங்களில் பல திட்டங்களை போட்டனர். பொய் செய்திகளை பரப்ப முயன்று அம்பலப்பட்டு, அவமானப்பட்டு நிற்கின்றனர். பொய் செய்திகளை பரப்ப பாஜக ரைட் விங் கணக்குகளை நடத்தி வருகிறது. அவர்கள் பொய் செய்தி பரப்பினால், உரிய ஆதாரத்தோடு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி
அப்போதுதான் அவர்களுக்கு பயம் இருக்கும். பொய் செய்திக்கு நூற்றுக்கணக்கில் தரும் பதிலடியால், அவர்கள் அதனை நீக்கிவிட்டு ஓட வேண்டும். காமெடியாகவும், கிண்டலாகவும் பதில்களை கூற வேண்டும். தோழமை கட்சியினருடன் சிண்டுமுடிக்கும் வேலையில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது.
2019 முதல் தமிழ்நாடு சூழல்
களத்திலும், ஆன்லைனிலும் சரியாக செயல்பட்டால், நமது இலக்கை நாம் நிச்சயம் எட்ட முடியும். 2019ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த அனைத்து தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. யார் வெல்வார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.. திமுக கூட்டணிதான் வெல்லும் என்று அனைவருக்கும் தெரியும்.. ஆனால் எத்தனை தொகுதிகள், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்ற முடிவுகளுக்காக தான் காத்திருப்போம். 2026 தேர்தலும் அப்படிதான்.
திமுக தான் சிங்கம்
திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.. ஆனால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக அமையும் என்பதை நோக்கிதான் இந்த உழைப்பு.. செயல் வீரர்கள் எல்லா கட்சிகளிலும் இருப்பார்கள்.. ஆனால் கொள்கைக்கான அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல், இணையத்தில் களமாடும் தோழர்கள் திமுகவில் மட்டும்தான் உண்டு. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும் திமுக தான் சிங்கம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications