Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக ஆட்சியின் குற்றவாளிகளை காப்பாற்றும் 'குட்கா பாஜக'-விஜயபாஸ்கர் வழக்கை முன்வைத்து சாடிய முரசொலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சியின் குற்றவாளிகளை காப்பாற்றுகிறது குட்கா பாஜக என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கை முன்வைத்து கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி.

இது தொடர்பாக முரசொலி நாளேட்டில் எழுதப்பட்ட தலையங்கம்: குட்கா' அ.தி.மு.க.வை உங்களுக்குத் தெரியும்! மாமூல் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டில் குட்கா விற்பனையை அமோகமாக நடத்தியது பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி. இதோ, இப்போது 'குட்கா' குற்றவாளிகளைக் காப்பாற்றி வருகிறது 'குட்கா' பா.ஜ.க. இதனை நாம் சொல்லவில்லை. சி.பி.ஐ.தான் சொல்கிறது. பெயர்ப் பொருத்தம் சரியாகத்தானே இருக்கிறது! 'குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரன் மற்றும் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது விசாரணை நடத்துவது தொடர்பான ஒன்றிய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. மற்றவர்களுக்கு எல்லாம் அனுமதி கிடைத்து விட்டது. எனவே கூடுதல் அவகாசம் வேண்டும்" என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது. "அரசின் அனுமதி கிடைக்காவிட்டால் இந்த வழக்கையே எப்படி நடத்துவது?" என்று சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த வழக்கு சூலை 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

DMK Condemns BJP on Gutkha scam case against AIADMK

ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லி பத்தாவது முறையாக இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 டிசம்பர் 15 முதல் 2023 சூன் 26 வரை பத்து முறை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

* 2022 டிசம்பர் 15
*2023 சனவரி 10
* பிப்ரவரி 6
* பிப்ரவரி 17
* LDII& 20
* ஏப்ரல் 18
* ஏப்ரல் 25
* CLD 11
* சூன் 3
*சூன் 26

என பத்து முறை வழக்கு விசாரணை நடக்காமல் ஒத்தி வைக்க யார் காரணம்? ஊழல் ஒழிப்பு என்று வாய்கிழியப் பேசும் ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் காரணம். சி.பி.ஐ.யால் குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது வழக்கு பதிய அனுமதி தராமல் போனதன் மூலமாக ஊழலுக்கும், குட்காவுக்கும் துணை போன 'குட்கா' பா.ஜ.க.தான் காரணம். 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்குச் சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு டைரி சிக்கியது. குட்கா வியாபாரியான மாதவராவ், தனது விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர்களில் யார் யாருக்கு எல்லாம் மாமூல் கொடுத்தேன் என்பதை டைரியாக எழுதி வைத்துள்ளார். அதில் அ.தி.மு.க. ஆட்சியில் பழனிசாமி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் பெயர் இருந்தது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன். சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட ஒன்றிய - மாநில அரசு உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகளின் பெயர்களும் இருந்தன.

250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய நிறுவனம் அது. அந்த நிறுவனத்தில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது அ.தி.மு.க. ஆட்சியில் என்பதுதான் அன்று பரவிய செய்தி ஆகும். குட்கா விவகாரத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் பரவலாக பேசப்பட்ட நிலையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சி.பி.ஐ. விசாரணை தேவை என்று அதில் முறையீடு வைத்திருந்தார். அன்றைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது.

சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று பழனிசாமி அரசு பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில், "டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை விற்பதற்காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப்படுத்துவது மாதிரியான ஆதாரங்களைக் கொடுத்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. (2018 ஏப்ரல் 26)

ஆனால் குட்கா குற்றவாளிகளைக் காப்பாற்ற முடிந்தவரையில் முயற்சித்தது பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி. ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றது தொடர்பாக வருமான வரித்துறை அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தையே மறைத்தார்கள். அ.தி.மு.க. அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கொண்ட ஒரு கோப்பு ஒன்றை வருமான வரித்துறை அனுப்பி இருந்தது. அந்த ஆவணங்களையே காணாமல் ஆக்கினார்கள். மிஸ்ஸிங் ஆகி விட்டது என்று சொன்னார்கள். ஆறு பேர் மீது மட்டும் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ. சாதாரண அதிகாரிகள் மீது வழக்குப் பதியவே 20 மாதங்கள் கழித்து - அதாவது 2020 ஜூலை மாதம் தான் அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்தது. அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீதான நடவடிக்கைக்கு அனுமதி இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ஐந்து ஆண்டுகளாக இழுத்தடித்தார்கள். இதற்கு பெரும்பாலும் அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளே காரணமாக இருந்தது. இதோ இப்போது பா.ஜ.க. ஆட்சி தனது வேலைகளைக் காட்டுகிறது. காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தவும், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் இடையூறாக இருக்கிறது பா.ஜ.க. அரசு. இதனை சி.பி.ஐ. அமைப்பே, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சொல்லிவிட்டது. நாம் சொல்லவில்லை. இந்த வழக்கை வைத்துத்தான் அ.தி.மு.க.வை வழிக்குக் கொண்டுவர ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். அதன் மூலமாகத் தான் அ.தி.மு.க.வை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இப்போது அதிகாரிகளைக் காப்பாற்றி வழக்கை இழுத்தடிக்கிறது பா.ஜ.க. 'குட்கா' பா.ஜ.க. என்றுதானே சொல்ல முடியும்?!

இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+